வட அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் (Belfast) நகரில் தொடர்ந்து இரண்டு நாட்களாக நீடித்து வரும் தீவிர இனவாத வன்முறைகள் மற்றும் பதற்றமான சூழ்நிலையை அடுத்து, அங்கு நிலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இச்சம்பவங்கள் குறித்து பெல்ஃபாஸ்டில் அரங்கேறி வருவது வெறும் போராட்டங்கள் அல்ல எனவும் அவை அப்பட்டமான இனவாதக் காடைத்தனம் என்றும் வட அயர்லாந்து செயலாளர் ஹிலாரி பென் (Hilary Benn) சாடியுள்ளார்.
வழக்கமான ஆர்ப்பாட்டங்கள் என்ற எல்லையைத் தாண்டி, வன்முறையாளர்கள் பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக வட அயர்லாந்து செயலாளர் கவலை வெளியிட்டுள்ளார்.
முகமூடி அணிந்த காடையர்கள் சிலரின் வீடுகளைத் தீக்கிரையாக்கியும், அச்சுறுத்தியும் வெளியேற்றியுள்ளனர்.
இதனால் அங்கு வாழும் ஒட்டுமொத்த இன சிறுபான்மையின மக்களும் தங்களுக்கும் இதே நிலை ஏற்படுமோ என்ற தீவிர பயத்தில் உள்ளனர்.
பொதுமக்கள் வேலைக்குச் செல்லும் வழியில், வன்முறையாளர்களால் வாகனங்கள் மறிக்கப்பட்டு அவர்களின் தேசிய இனம் என்னவென்று விசாரணை நடத்தப்படுவதாகப் புகார்கள் கிடைத்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, வட அயர்லாந்திற்கு மிகத் தொலைவில் வாழும் சில நபர்கள், சமூக ஊடகங்களமூலம் திட்டமிட்டு வன்முறையைத் தூண்டி வருவதாக ஹிலாரி பென் குற்றம் சாட்டியுள்ளார்.













