தமிழகத்திலுள்ள கூட்டுறவு வங்கிகளின் மூலம் 75,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகள் என அனைத்துத் தரப்பினருக்கும் 100 சதவீதம் முழுமையாகப் பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்து தமிழக முதல்வர் விஜய் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இதன் மூலம் மாநிலம் முழுவதும் சுமார் 14.43 லட்சம் விவசாயிகள் பயனடையவுள்ளதுடன், இதற்காகத் தமிழக அரசுக்கு சுமார் 6,000 கோடி ரூபாய் நிதிச் சுமை ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த மே 25-ம் திகதி , 50,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற குறு மற்றும் சிறு விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், இத்திட்ட எல்லைக்குள் பெரு விவசாயிகளையும் உள்ளடக்கக் கோரி மாநிலத்தின் பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தன.
இதனைத் தொடர்ந்து, ஜூன் 15-ம் திகதி தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில், வேளாண்மை – உழவர் நலத்துறை, கூட்டுறவுத் துறை, நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் பங்கேற்புடன் அவசர மறு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) 2025-ம் ஆண்டு நவம்பர் 28-ம் திகதியிட்ட வழிகாட்டுதலின்படி, கடன் தள்ளுபடிக்கான முழுத் தொகையையும் அரசே 45 முதல் 60 நாட்களுக்குள் முழுமையாகச் செலுத்த வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
தமிழக அரசின் தற்போதைய நிதி நெருக்கடிக்கு மத்தியிலும், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் இம்முடிவு எட்டப்பட்டுள்ளது.














