ஏறாவூரில் வீதியால் தனியாக சென்ற 16 வயது சிறுவன் ஒருவரை ஒரு குழுவைச் சேர்ந்த சிலரால் பிடித்துச் சென்று தாக்கிய சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளிவந்த வீடியோ காட்சியை அடுத்து பாதிக்கப்பட்ட சிறுவனின் தயார் முறைப்பாட்டையடுத்து 16 வயதுடைய சிறுவன் ஒருவர் நேற்று (15) கைது செய்துள்ளதாகவும் ஏனையவர்கள் தலைமறைவாகியுள்ள தாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடி தளவாய் பிரதேசத்தில் 15,16,17 வயதுடைய சிறுவர்களை கொண்ட வாள்வெட்டு குழுக்கள் 3 இயங்கி வருகிறது இந்த குழுக்களை அந்த பகுதியைச் சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவர் இயக்கி வருவதாகவும்.
இந்த குழுக்கள் மோட்டார் சைக்கிளில் வாள் மற்றும் கோடாரியுடன் திரிவதாகவும் இந்த குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட சண்டை காரணமாக அண்மையில் முஸ்லீம்களிடையே நோன்பு பொரு நாள் காலத்தில் இரவில் இடம்பெற்ற இசைக்குழுவை பார்வையிட்டு வீடு திரும்பிய ஒரு குழுவினர் வாள்வெட்டு தாக்குதல் நடத்திய சம்பவம் இடம்பெற்றது.
இந்த நிலையில் பழிவாங்கும் நடவடிக்கையாக ஒரு குழுவைச் சேர்ந்த ஒருவர் வீதியால் தனியாக செல்லும் போது மற்ற குழுவைச் சேர்ந்த குழுவினர் அவரை கடத்தி சென்று ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மரத்தில் தலைகீழாக கட்டி ஆடைகளை கலைந்து தாக்குதல் நடாத்தி வந்துள்ளனர்.
இவ்வாறு குழுக்களுக்குள் இந்த மோதல் இடம்பெற்று வந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட சிறுவனை கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் கடத்தி சென்று தாக்குதல் நடத்தியதில் அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வெளிவந்துள்ளார்.
இந்த நிலையில் அவரை கடத்தி சென்று தாக்குதல் நடத்திய போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளிவந்ததை அடுத்து பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் நேற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து வீடியோ காட்சி ஆதாரத்தை வைத்து தாக்குதல் நடத்திய அந்த பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய ஒருவரை கைது செய்னர் அதனுடன் தொடர்புடைய 3 பேர் தலைமறைவாகி உள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.












