பிரித்தானியாவின் வெஸ்டன்-சூப்பர்-மேர் பகுதியில், 9 வயது சிறுமி ஒருவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பதின்ம வயது சிறுவன், அச்சிறுமி இறப்பதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பே பாடசாலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 15ஆம் திகதி, ஏரியா தோர்ப் (Aria Thorpe) என்ற 9 வயதுச் சிறுமி தனது சொந்த வீட்டிற்குள் கத்திகுத்து காயத்துடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
இச்சிறுமியின் மரணம் தொடர்பான கொலை மற்றும் மனிதப்படுகொலை குற்றச்சாட்டுகள் குறித்த வழக்கு விசாரணை தற்போது பிரிஸ்டல் கிரவுன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
சட்டரீதியான வயதுக் கட்டுப்பாடு காரணமாகப் பெயர் விபரங்கள் வெளியிடப்படாத 16 வயதுச் சிறுவன் ஒருவனே இக்கொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக நிறுத்தப்பட்டுள்ளார்.
தன் மீதான இருவேறு கொலைக் குற்றச்சாட்டுகளையும் அந்த 16 வயதுச் சிறுவன் நீதிமன்றில் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
குறிப்பிட்ட அந்தச் சிறுவன் பாடசாலையில் அடிக்கடி இடையூறு விளைவித்துவந்த நிலையில் இக் கொலைச் சம்பவம் நிகழ்ந்த அன்றைய தினமே சிறுவன் பாடசாலையிலிருந்து நீக்கப்பட்ட செய்தி, இந்த வழக்கில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.














