மஹாராஷ்டிரா மாநிலத்தில் பிரபல நிறுவனத்தின் நிதித்துறையில் பணியாற்றும் அதிகாரி, ‘வாட்ஸாப்’ தகவல் பரிமாற்ற செயலியில், நிறுவனத்தின் இயக்குநர் என கூறி, குறுஞ்செய்தி அனுப்பிய நபரின் உத்தரவுகளுக்கு இணங்கி, கடந்த சில நாட்களாக, 10.40 கோடி ரூபாய் அனுப்பி ஏமாந்தமை தெரிய வந்துள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையைச் சேர்ந்த, ‘ஐநாக்ஸ்’ நிறுவனம், திரையரங்குகள், மருத்துவ ஆக்சிஜன்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனத்தின் நிதித்துறையில், 31 ஆண்டுகளாக பணியாற்றி வரும் அதிகாரிக்கு, சில நாட்களுக்கு முன், புதிய எண்ணில் இருந்து, ‘வாட்ஸாப்’பில் குறுஞ்செய்தி வந்துள்ளது.
அதில், ‘நான் சித்தார்த் ஜெயின், நிறுவனத்தின் இயக்குநர். அவசரமாக ஒரு மீட்டிங் செல்கிறேன். என்னை அழைக்க வேண்டாம். நான் அனுப்பும் வங்கி கணக்கிற்கு, 4.65 லட்சம் ரூபாயை மாற்றுங்கள்’ என கூறப்பட்டுள்ளது.
அந்த எண்ணின் முகப்பு படமாக சித்தார்த் ஜெயினின் புகைப்படமே இருந்துள்ளது.
இதை நம்பி, இயக்குநர் தான் உத்தரவிட்டுள்ளார் என பணத்தை அனுப்பி உள்ளார்.
அடுத்த நாட்களிலும் தொடர்ந்து இதே போல் 63 பரிவர்த்தனைகள் மூலம், பல்வேறு வங்கி கணக்குகளுக்கு 10.40 கோடி ரூபாய் வரை பணம் அனுப்பி உள்ளார்.
அதன் பின், இயக்குநரின் அலுவலக மின்னஞ்சலுக்கு அனுப்பிய பணத்திற்கான ரசீது விபரங்களை கேட்டு நிதித்துறை அதிகாரி மின்னஞ்சல் அனுப்பி உள்ளார்.
அவருக்கு, ‘நான் எந்த பணமும் அனுப்ப சொல்லவில்லையே’ என பதில் வந்துள்ளது.
அப்போது தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, உடனடியாக மும்பை பொலிஸாருக்கு தகவல் அளித்தார்.
பொலிஸார் நடத்திய விசாரணையில், டில்லியில் ஐ.டி.எப்.சி., வங்கி கிளை ஒன்றில் இரு கணக்குகளில் சந்தேகத்திற்கு இடமான பரிவர்த்தனைகள் நடந்த தகவல் கிடைத்துள்ளது.
அவர்களை கைது செய்து விசாரித்த போது, மோசடி நபர்களுக்கு 20,000 ரூபாய் கமிஷன் பெற்றுக்கொண்டு வங்கி கணக்கை தந்து உதவியதாக கூறியுள்ளனர்.
தற்போது பணம் சென்ற பாதையை கண்டறியும் பணியில் சைபர் குற்றப்பிரிவு பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.














