பிரித்தானிய அரசியலில் மீண்டும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்றாவது முறையாக, பிரதமர் ஒருவர் தனது பதவியை விட்டு விலகும் சூழல் உருவாகியுள்ளது.
பிரதமர் ஸ்டார்மர் பதவியில் தொடர்வதை விட விலகுவதே கட்சிக்கு சிறந்தது என அவரது கட்சியினரே கருதுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அரசாங்கத்தினரிடமும் தொழிற் கட்சியினரிடமும், ஸ்டார்மர் விரைவில் தனது பதவி விலகல் திட்டத்தை அறிவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சில தகவல்களின்படி, பிரதமர் இன்றே இதுகுறித்து அறிவிப்பு வெளியிடக்கூடும் என கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களாகவே அவரது தலைமையின்மீது கட்சிக்குள் அதிருப்தி அதிகரித்து வந்தது.
கடந்த வாரம் பர்ன்ஹாமிற்கு (Burnham) கிடைத்த வெற்றியும், அதன் பெரும் தாக்கமும், தொழிற் கட்சிக்குள் நீண்டகாலமாக காணப்பட்ட அதிருப்தியை வெளிக்கொண்டு வந்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வார இறுதியில் தனது அரசியல் எதிர்காலம் குறித்து ஸ்டார்மர் நெருங்கிய ஆலோசனைகளை நடத்தியதாகவும், தனது பதவியைத் தொடரும் வாய்ப்புகள் குறைந்து வருவதை அவர் உணர்ந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், உள்துறைச் செயலாளர் மற்றும் வெளியுறவுச் செயலாளர் உள்ளிட்ட குறைந்தது நான்கு அமைச்சரவை அமைச்சர்கள், ஸ்டார்மர் தனது பதவி விலகலுக்கான கால அட்டவணையை வகுக்க வேண்டும் என்று நேரடியாக வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், எண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) இன்று திங்கட்கிழமையன்று வெஸ்ட்மின்ஸ்டர் நாடாளுமன்றத்திற்கு வந்து முறைப்படி தனது எம்.பி பதவியை ஏற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பிரதமர் பெரும்பாலும் பதவி விலகக்கூடும் எனவும், கட்சியின் புதிய தலைவராக எண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) நியமிக்கப்படக்கூடும் எனவும் அறியமுடிகின்றது.
இதேவேளை, பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பதவி விலகுவார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




















