தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கைக்குச் சட்டவிரோதமான முறையில் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 45 இலட்சம் இந்திய ரூபா மதிப்பிலான 300 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை இந்தியக் கடலோரப் பாதுகாப்புக் குழுமப் பொலிஸார் நேற்று (21) பறிமுதல் செய்துள்ளனர்.
மண்டபம் வடக்கு துறைமுகக் கடற்கரைப் பகுதியூடாக சர்வதேசக் கடல் எல்லையைத் தாண்டி இலங்கைக்குத் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் கடத்தப்படவுள்ளதாக மண்டபம் கடலோரப் பாதுகாப்புக் குழுமப் பொலிஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இந்த ரகசியத் தகவலையடுத்து, கடலோரப் பாதுகாப்புக் குழுமப் பொலிஸார் மண்டபம் வடக்கு துறைமுகக் கடற்கரைப் பகுதி முழுவதும் தீவிரக் கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கடற்கரையோரமாகச் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் அமைந்திருந்த ஒரு குறிப்பிட்ட பகுதியை அதிகாரிகள் அதிரடிச் சோதனைக்கு உட்படுத்தினர்.
அந்தச் சோதனையின் போது, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த சாக்கு மூட்டைகளில் சுமார் 300 கிலோ எடையுடைய பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை மர்ம நபர்கள் கடத்தலுக்காகப் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சர்வதேசச் சந்தையில் அதிக தேவையைக் கொண்டுள்ள இந்தக் கடல் அட்டைகளைப் பிடிப்பதற்கும், வைத்திருப்பதற்கும் இந்திய வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
தற்போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ள 300 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 45 இலட்சம் இந்திய ரூபா இருக்கும் எனப் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட கடல் அட்டை மூட்டைகள் அனைத்தும் மண்டபத்தில் உள்ள இந்தியச் சுங்கத் துறை அதிகாரிகளிடம் மேல்நடவடிக்கைகளுக்காகப் பொலிஸாரால் முறைப்படி ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இவற்றை இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பின்னணியில் இருந்து செயற்பட்ட கடத்தல் கும்பலின் மர்ம நபர்கள் யார்? எந்தப் படகு மூலம் இவற்றை இலங்கைக்குக் கொண்டு செல்லத் திட்டமிட்டிருந்தனர்? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் கடலோரப் பாதுகாப்புக் குழுமப் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.













