இங்கிலாந்தில் நீதித்துறை தவறுகளால் பாதிக்கப்பட்டவர்களின் வழக்குகளை மறுஆய்வு செய்யும் குற்றவியல் வழக்குகள் மறுஆய்வு ஆணையம் (Criminal Cases Review Commission – CCRC) தனது பணித்தரத்தை அவசரமாக மேம்படுத்த வேண்டும் என்று சுயாதீன ஆய்வறிக்கை ஒன்று வலியுறுத்தியுள்ளது.
HM Crown Prosecution Service Inspectorate (HMCPSI) வெளியிட்டுள்ள இந்தக் கடுமையான அறிக்கையில், தேவையற்ற விசாரணைகளில் நேரமும் வளங்களும் வீணடிக்கப்படுவதாகவும், வழக்குகளை கையாளும் முறையில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக, CCRC-யின் சட்டப் பிரிவில் பயிற்சியாளர்கள் (Interns) பல வழக்குகள் தொடர்பான முக்கிய கேள்விகள் மற்றும் சட்டப் பணிகளை மேற்கொள்வதாகவும், அவர்கள் செய்த பணிகள் முறையாக பரிசோதிக்கப்படாமல் இருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது நீதித்துறை நம்பகத்தன்மை குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்த ஆய்வு, பாலியல் பலாத்கார வழக்கில் தவறாக குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 17 ஆண்டுகள் சிறையில் கழித்த ஆண்ட்ரூ மால்கின்சன் தொடர்பான விவகாரத்திற்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்டது. தனது குற்றவியல் தீர்ப்பை மறுஆய்வு செய்ய அவர் CCRC-க்கு பலமுறை விண்ணப்பித்திருந்தாலும், முதல் இரண்டு விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டன.
மூன்றாவது விண்ணப்பத்தின் பின்னரே அந்த வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டது. அதன் பின்னர் அவரது தண்டனை தவறானது என்பது உறுதி செய்யப்பட்டதால், 2020ஆம் ஆண்டு அவர் விடுதலை செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம், நீதித்துறை மறுஆய்வு அமைப்பின் செயல்திறன் மற்றும் பொறுப்புணர்வு குறித்து இங்கிலாந்தில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
















