யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் உறுப்பினர் பதவியை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஆகஸ்ட் 31 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அபிநவ நிவாஹல் பெரமுன தலைவர் ஓசல ஹெரத் தாக்கல் செய்த இந்த மனு, மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மகேன் கொப்பல்லாவ முன்பு இன்று (02) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அசோக் பரன், மனுவின் விசாரணைக்கு மிக விரைவான திகதியை வழங்குமாறு நீதிமன்றத்தில் சாட்சியங்களை முன்வைத்தார்.
அதேவேளை , எதிர்மனுதாரரான நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சார்பில் ஆஜரான சட்டத்தரணி சேனானி தயரத்ன, அக்கோரிக்கைக்கு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, சம்பந்தப்பட்ட மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 31 அன்று கூட்டுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அவர் இன்னும் ஒரு அரசாங்க மருத்துவராகப் பணிபுரிந்து வந்தார் என்றும், அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகளின்படி, ஒரு அரசாங்க ஊழியரை நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுப்பது சட்டத்திற்குப் புறம்பானது மற்றும் அவரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கத் தகுதியற்றவராக்குகிறது என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.














