நாட்டில் நீண்டகாலமாக நிலவி வரும் குடிநீர் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை வழங்குவதற்காக, 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான நிதித் தேவைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (08) நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களம், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை உள்ளிட்ட நிறுவனங்களின் 2026ஆம் ஆண்டுக்கான திட்ட முன்னேற்றங்கள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

நாட்டின் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பான குடிநீரை வழங்குவதற்காக, வரலாற்றில் அதிகூடிய வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டை 2027ஆம் ஆண்டில் மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும், ஒரே நோக்கத்துடன் பல்வேறு அமைச்சுகளின் கீழ் இயங்கும் நிறுவனங்களினால் ஏற்படும் செயற்திறன் குறைபாடுகள் தொடர்பிலும் கவனம் செலுத்திய ஜனாதிபதி, உற்பத்தித்திறன் அற்ற நிறுவனங்களை மறுசீரமைக்க அல்லது நீக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
கண்டி வடக்கு ஒருங்கிணைந்த நீர் வழங்கல் திட்டம், கொழும்பு பெரும்பாக கழிவுநீர் முகாமைத்துவத் திட்டம், அம்பத்தலே நீர் வழங்கல் திட்டம் மற்றும் அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டம் உள்ளிட்ட முக்கிய திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்தை விரைவுபடுத்தவும், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பகுதியளவில் நிறைவடையாத வீடுகளுக்கான உதவித் திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார்.











