பிரிட்டனில் இரவு நேரத்தில் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு வீடு திரும்பிய தந்தை ஒருவர், தனது 4 வாரமே ஆன ஆண் குழந்தையைக் குலுக்கிக் கொலை செய்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சோமர்செட்டின் (Somerset) சாட் நகரில், கடந்த 2022 ஜூலை 16 அன்று நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பாக, குழந்தையின் தந்தையை குற்றவாளி என நீதிமன்றம் ஒருமனதாக அறிவித்துள்ளது.
நீதிமன்ற விசாரணையின்படி, டோனி பார்ட்லெட் மற்றும் அவரது அப்போதைய துணைவியான எவ்லின் பாலன்டைன் ஆகியோர், தமது குழந்தையுடன் அன்றைய தினம் இரவு வெளியில் சென்றுள்ளனர்.
வீடு திரும்பியதும் தந்தை டோனி பார்ட்லெட் குழந்தையுடன் கீழே தனியாக இருந்துள்ளார்.
சிறிது நேரம் கழித்து எவ்லின் வந்து பார்த்தபோது, குழந்தை எவ்வித அசைவுமின்றிக் காணப்பட்டுள்ளான்.
குழந்தை தனது இறுதி மூச்சை விடுவதைப் போல இரண்டு முறை பலத்த மூச்சு வாங்கியதாக எவ்லின் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
உடனடியாக விரைந்து வந்த அவசர மருத்துவக் குழுவினர், குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், தந்தை குழந்தையைக் கடுமையான வேகத்தில் உலுக்கியதால், அதன் தண்டுவடம் மற்றும் விலா எலும்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதுடன், மூளையும் மிக மோசமாகச் சேதமடைந்தது தெரியவந்தது.
இதனால் சுயநினைவை இழந்த குழந்தை, தானாகச் சுவாசிக்கும் திறனையும் இழந்துள்ளது.
தற்போது டெவோன் பகுதியைச் சேர்ந்த 39 வயதான டோனி பார்ட்லெட் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் நீதிமன்றத்தில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் ஜூலை 24 ஆம் திகதி பிரிஸ்டல் கிரவுன் நீதிமன்றத்தில் இவருக்கான தண்டனை விபரங்கள் அறிவிக்கப்படவுள்ளன .













