நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு நோயின் பரவல் காரணமாக இரண்டு வாரங்களாக மூடப்பட்டிருந்த கொழும்பு கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகத்தை, நாளை (13) முதல் மீண்டும் திறக்க பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, ‘கிளீன் ஸ்ரீ லங்கா’ வேலைத்திட்டத்திற்கு இணங்க, பல்கலைக்கழக வளாகத்தைச் சுத்தப்படுத்தும் மற்றும் புகைத்தல் நடவடிக்கைகள் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தற்போதைய சூழ்நிலையில், நுளம்புகள் பெருகுவதற்கான இடங்களைப் பேணுபவர்களுக்கு எதிராகச் சட்டத்தை மிகத் தீவிரமாகச் செயற்படுத்தி வருவதாகப் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இந்த ஆண்டில் இதுவரை 67,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் 47 பேர் உயிரிழந்துள்ளனர்.
இச்சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்காக, இன்றும் (12) பல பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்போது, நுளம்பு குடம்பிகள் காணப்பட்ட பத்தரமுல்லைப் பகுதியில் உள்ள முதியோர் இல்லமொன்றின் மீது வழக்குத் தொடர பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.












