பிலியந்தலையில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுக்கான விளக்கத்தினை பொலிஸார் வழங்கியுள்ளனர்.
பிலியந்தலை, பொக்குந்தர பகுதியில் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்ல முயன்ற வன்முறைக் கும்பலைச் சேர்ந்த ஒருவர், தடுத்து நிறுத்த முயன்ற பொலிஸ் அதிகாரி மீது கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தற்காப்புக்காகப் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் படுகாயமடைந்துள்ளதுடன், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் அதிகாரியும், இடுப்பில் குண்டு பாய்ந்த சந்தேகநபரும் தற்போது களுபோவிலபோதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முன்னதாக, கூர்மையான ஆயுதங்களுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் அடங்கிய கும்பல் ஒன்று, பொரலஸ்கமுவ, ஓ.பி. பெரேரா மாவத்தையில் உள்ள வீடு ஒன்றின் மீது திடீர் தாக்குதல் நடத்தி, அதனைப் பலத்த சேதப்படுத்தியுள்ளது.
தாக்குதலின் பின்னர் இக்கும்பல் பிலியந்தலையை நோக்கித் தப்பிச் செல்வதாகப் பொரலஸ்கமுவ பொலிஸாருக்கு அவசரத் தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் அடிப்படையில், பிலியந்தலை பொக்குந்தர வீரசிங்க மாவத்தை பகுதியில் பொலிஸார் விசேட காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தப்பி வந்த இரண்டு சந்தேகநபர்கள் பொலிஸாரைக் கண்டதும், தங்களின் மோட்டார் சைக்கிளைத் திசை திருப்பித் தப்பியோட முயன்றுள்ளனர்.
இதனை அவதானித்த பொலிஸ் அதிகாரிகள் மோட்டார் சைக்கிளை நிறுத்த பெரும் முயற்சி மேற்கொண்டனர்.
இதன்போது, மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தை எடுத்து, பொலிஸ் அதிகாரி ஒருவரைச் சரமாரியாக வெட்டியுள்ளார்.
நிலைமை மோசமடைந்ததைக் கண்ட மற்றுமொரு பொலிஸ் அதிகாரி, தாக்குதல் நடத்தியவரை நோக்கிக் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
இதில் சந்தேகநபரின் இடுப்புப் பகுதியில் குண்டு பாய்ந்ததை அடுத்து, அவர் மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்தார்.
உடனே செயற்பட்ட பொலிஸார் அவரை அதிரடியாகக் கைது செய்தனர்.
எனினும், மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த மற்றைய சந்தேகநபர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பண்டாரகம, வீதியகொட பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
இச்சம்பவத்தின் போது காயமடைந்த பொலிஸ் அதிகாரி, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சந்தேகநபர் மற்றும் வன்முறைக் கும்பலின் ஆரம்பக் கட்டத் தாக்குதலுக்கு உள்ளான இளம் பெண் ஆகிய மூவரும் தற்போது களுபோவில போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தப்பியோடிய ஏனைய சந்தேகநபர்களைக் கைது செய்ய பிலியந்தலை மற்றும் பொரலஸ்கமுவ பொலிஸார் இணைந்து தீவிர கூட்டு விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.












