தமிழ் பேசும் சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆறு கட்சிகள் கடந்த வாரம் கொழும்பில் கூடி ஓர் இணக்கத்துக்கு வந்திருக்கின்றன.இது ஒரு கூட்டு அல்ல,இது ஒர் இடையூடாட்டத் தளம் என்று அக்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.
இதை ஓர் இனவாதக் கூட்டு என்று இதை எதிர்ப்பவர்கள்,விமர்சிப்பவர்கள் வர்ணிக்கிறார்கள். இலங்கைத்தீவில் உள்ள சிறிய தேசிய இனங்கள் தங்களுக்கு இடையே முரண்பாடுகளைக் கொண்டிருக்கின்றன என்பது உண்மை.ஆனாலும் பெரிய இனத்தின் மேலாண்மையால் பாதிக்கப்படுகின்ற, பெரிய இனத்தின் மேலாண்மையை எதிர்க்கின்ற சிறிய தேசிய இனங்களுக்கு இடையே ஏதோ ஓர் உரையாடல் தளம் அவசியம். ஏனென்றால் இந்தச் சிறிய தேசிய இனங்களுக்கென்று பொதுவான பிரச்சினைகள் உண்டு. உதாரணமாக காணிப் பிரச்சினை என்று பார்த்தால்,தமிழ் மக்கள் தங்களுடைய காணிகளை அரச திணைக்களங்கள் அபகரித்து வைத்துள்ளன அல்லது இப்பொழுதும் அபகரிக்க முயற்சிக்கின்றன என்று கூறிப் போராடுகிறார்கள்.ஆனால் மலையக மக்களில் ஒரு பகுதியினருக்கு நிலமே இல்லை.அவர்கள் நாடற்றவர்கள்.இந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் மலையகத்தோடு தமது சகோதரத்துவத்தை,உணர்வுத் தோழமையை நிரூபிக்க வேண்டியது அவசியம். எனவே தமிழ் பேசும் சிறிய தேசிய இனங்களுக்கு இடையே உரையாடல்கள் அவசியம்.இந்த உரையாடல்களை இனவாதக் கூட்டு என்று வர்ணிப்பதே இனவாதம்தான். எனவே இலங்கைத் தீவை இரண்டாகப் பிரிப்பது என்ற ஒரு தீர்வைத்தவிர வேறு எந்த ஒரு தீர்வைக் குறித்துச் சிந்தித்தாலும் இப்படிப்பட்ட உரையாடல் களம் அவசியம்.அதை நோக்கி இந்த ஒருங்கிணைப்பு முயற்சிகள் குவிமையப்படுத்தப்படுமா?
மேற்படி கட்சிகளுக்கு இடையில் ஒரு புரிந்துணர்வு ஏற்பட்ட பின் அதனை அவர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்தபோது, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆகிய மனோகணேசன் அது ஓர் இடையூடாட்டத் தளம் மட்டும்தான் என்று நறுக்காகத் தெரிவித்திருந்தார்.சுமந்திரனும் ஏறக்குறைய அதே கருத்தைத் தெரிவித்திருந்தார்.கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடந்த ஓர் ஊடகச் சந்திப்பில் சுரேஷ் பிரேமசந்திரனும் வேறு வார்த்தைகளில் அதைக் கூறியிருக்கிறார்.
இந்தக் கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வானது இலங்கைத் தீவில் உள்ள சிறிய தேசிய இனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நோக்கிலானது என்று அந்த ஊடகச் சந்திப்பில் கூறப்பட்டது.தமிழ் பேசும் சமூகங்களுக்கென்று பொதுவான பிரச்சினைகள் உண்டு.அவற்றை ஒரே அணியாக நின்று எதிர்கொள்ள வேண்டும் என்பதிலும் யாருக்கும் சந்தேகம் இல்லை.இந்த விடயத்தில் தமிழ் பேசும் கட்சிகளை சேர்ந்தவர்கள் நாடாளுமன்றத்தில் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையை பல ஆண்டுகளாக,தொடர்ச்சியாக முன்வைத்து வருபவர் மனோ கணேசன்தான்.சம்பந்தரின் காலத்தில் இருந்து அதனை அவர் தொடர்ச்சியாகக் கேட்டு வருகிறார்.
இப்பொழுது உருவாக்கியிருக்கும் இந்த இடையூடாட்டத் தளத்துக்குள் தமிழ்த் தேசியப் பேரவை என்று அழைக்கப்படுகின்ற,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை மையமாகக் கொண்ட கட்டமைப்பு இணைக்கப்படவில்லை. அதனால் இந்தக் கூட்டை முன்னின்று ஒருங்கிணைத்தது சுமந்திரன் என்றும், அவர் தமிழ்த் தேசியப் பேரவையை அதற்குள் உள்வாங்க முயற்சிக்கவில்லை அல்லது விரும்பவில்லை என்றும் ஓர் ஊகம் தமிழ்த் தேசிய அரசியல் வட்டாரங்கள் மத்தியில் உண்டு.
மேலும்,இந்த இடையூடாட்டத் தளத்தில் இணைந்திருக்கும் கட்சிகளின் மூன்று முக்கிய கோரிக்கைகளில் ஒன்று,மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டும் என்பதாகும். இந்தக் கோரிக்கைக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அனேகமாக ஒத்துழைக்காது என்ற கணிப்பு உண்டு. அதனால்தான் அக்கட்சி இதில் இணைத்துக்கொள்ளப்படவில்லை என்ற ஒர் ஊகமும் அரசியல் வட்டாரங்களில் உண்டு.
மேலும் கிளிநொச்சியில் மலையக மக்களின் பலமான வாக்குத்தளம் உண்டு. அங்கே மனோகணேசனின் முற்போக்குக் கூட்டணி போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பும் உண்டு.சுமந்திரன் கிளிநொச்சியில் சிறீரீதரனுக்கு எதிரான சக்திகளுக்குத் தலைமை தாங்குகிறார்.எனவே கிளிநொச்சியில் மனோ கணேசனின் கட்சியை இறக்குவதன்மூலம், அவர் தன் உட்கட்சிப் பகையை தீர்த்துக்கொள்ள முயற்சிக்கிறாரா? என்ற ஊகமும் உண்டு.
ஆனால் இந்த ஊகங்களை மனோகணேசன் நிராகரித்தார். இதுதொடர்பாக தான் சுமந்திரனிடம் நேரடியாகவே கேட்டடாகவும் அவர் கூறுகிறார். கட்சிகளுக்குள் காணப்படும் அகமுரண்பாடுகளையோ அல்லது கட்சிகளுக்கு இடையே காணப்படும் வெளி முரண்பாடுகளையோ இம்மேடை பிரதிபலிக்கக் கூடாது என்பதில் அவர் மிகவும் உறுதியாகவும் காணப்படுகிறார். எதிர்காலத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை இந்த இடையூடாட்ட மேடைக்குள் இணைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டு என்று அவர் கூறினார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது தமிழகத்தை நோக்கிச் சென்றிருக்கிறது.குறுகிய காலத்துக்குள் இரண்டு தடவைகள் அவர்கள் தமிழகத்துக்குச் சென்றிருக்கிறார்கள்.இந்த இரண்டு தடவைகளிலும் அவர்கள் தமிழகத் தலைவர்களோடு என்ன கதைத்தார்கள் என்பது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கைகளைத் தொகுத்துப் பார்க்கும்போது, ஒரு விடயம் மிகத் தெளிவாகத் தெரிகிறது.இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அரசாங்கம் கொண்டுவரக்கூடிய புதிய யாப்பின் மீது இந்தியாவின் அழுத்தம் இருக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பது தெரிகிறது. அவ்வாறான அழுத்தத்தின்மூலம் ஒற்றை ஆட்சிக்கு உட்பட்ட “எக்கிய ராஜ்ய” போன்ற தீர்வு தமிழ் மக்கள் மீது திணிக்கப்படும் நிலைமைகளைத் தடுக்க வேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்ப்பது தெரிகிறது. அதாவது தமிழ்த் தேசியப் பேரவையின் தமிழக விஜயத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்று ஒரு புதிய யாப்பை நோக்கியது.
கடந்த வாரம் கொழும்பில் சந்தித்த கட்சிகளுக்கும் அதே நோக்கம் உண்டு. அவர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்த பிரதான மூன்று நோக்கங்களில் அதுவும் ஒன்று.ஆனால் அதனை அவர்கள் பெருமளவுக்கு உள்நாட்டுக்குள் தீர்த்துக் கொள்ளலாம் என்று நம்புவதாகத் தெரிகிறது.
வரலாற்றில் “இது பொன்னான வாய்ப்பு” என்று மனோகணேசன் ஒரு சிங்கள ஊடகத்துக்குத் தெரிவித்திருக்கிறார்.தென்னிலங்கையில் இடம்பெற்ற தன்னெழுச்சிப் போராட்டங்களின் பின்னர் இனவாதக் கட்சிகள் ஒப்பீட்டளவில் தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன.இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரு புதிய யாப்பை நோக்கி அனுர சிந்திக்க வேண்டும் என்றும் மனோகணேசன் கூறுகிறார்.
அனுர ஒரு புதிய யாப்பை தன்னுடைய முதலாவது ஆட்சிக் காலத்துக்குள் கொண்டு வருவாரா என்பது இப்பொழுதும் சந்தேகம்.மாகாண சபைத் தேர்தலை இந்த ஆண்டுக்குள் நடத்துவார்களா என்பதும் சந்தேகம்.இனப் பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கத்தோடு ஒரு புதிய யாப்பைத் தயாரிப்பது என்பது முழுக்கமுழுக்க சிங்கள பௌத்த இனவாதத்தோடு மோதும் ஒரு செயல்.அப்படி மோதாமல் இணக்கமாக ஒரு தீர்வைக் கொண்டு வருவது என்று சொன்னால், ஏற்கனவே மேசையில் உள்ள “எக்கிய ராஜ்ய”வைத்தான் ஒரு தொடக்கப் புள்ளியாக எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.
ஆனால் அது ஒற்றை ஆட்சி முறைமைக்கு உரியது என்று கஜேந்திரகுமார் திட்டவட்டமாகத் தெரிவிக்கிறார்.அந்த முயற்சியைத் தடுப்பதற்கு அவர் தமிழகத்தின் ஆதரவைக் கேட்டிருக்கிறார். எனவே கடந்த வாரம் ஒன்றிணைந்த ஆறு கட்சிகளும் இந்த விடயத்தில் தமிழ்த் தேசியப் பேரவைக்கு நம்பிக்கையூட்டக்கூடிய வாய்ப்புகள் எந்தளவுக்கு உண்டு? மனோகணேசன் கூறுவதுபோல தமிழ்த் தேசியப் பேரவை இந்த ஒன்றிணைவுக்குள் உள்வாங்கப்படுமா?












