நாட்டின் நிலையான அபிவிருத்தியை உறுதிப்படுத்துவதற்கு வினைத்திறன்மிக்க அரச துறையும், பொறுப்புக்கூறலுடன் கூடிய முகாமைத்துவ கணக்கீட்டு முறைமையும் அத்தியாவசியமானவை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இலங்கை பட்டய முகாமைத்துவக் கணக்காளர்கள் நிறுவனமான (CMA Sri Lanka) ஏற்பாடு செய்திருந்த CMA இலங்கை தேசிய முகாமைத்துவ கணக்கீட்டு மாநாடு 2026 நிகழ்வில் உரையாற்றிய போதே பிரதமர் இதனை குறிப்பிட்டார்.

“நெருக்கடி, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சி – முகாமைத்துவ கணக்கீட்டுக் கோணத்தில்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த மாநாடு நேற்றும் இன்றும் கொழும்பு Cinnamon Life ஹோட்டலில் இடம்பெற்றது.
நிகழ்வில் முகாமைத்துவ கணக்கீட்டு மாநாட்டின் சஞ்சிகை வெளியிடப்பட்டதுடன், கணக்கீட்டுத் துறையில் 50 ஆண்டுகள் சேவையாற்றிய மூத்த தொழில்வல்லுநர்களுக்கு பொன் விழா விருதுகளும் வழங்கப்பட்டன. மேலும், அரச உத்தியோகத்தர்கள் CMA முகாமைத்துவ கணக்கீட்டு பாடநெறியை கற்பதற்காக 100 பூரண புலமைப்பரிசில்களும் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டன.
உரையாற்றிய பிரதமர், தற்போதைய உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் முகாமைத்துவ கணக்கீடு என்பது வெறும் நிதி அறிக்கையிடல் நடவடிக்கை அல்ல என்றும், அரச மற்றும் தனியார் துறைகளில் சரியான மூலோபாயத் தீர்மானங்களை மேற்கொள்ள உதவும் முக்கிய கருவி என்றும் தெரிவித்தார்.
இலங்கை நிதி நெருக்கடியிலிருந்து மீண்டு வரும் நிலையில், பொருளாதாரத்தை மேலும் ஸ்திரப்படுத்தி போட்டித்தன்மைமிக்க நாடாக மாற்றுவது அடுத்த கட்ட சவால் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், அரச நிறுவனங்கள் உரிய காலத்தில் நிதி அறிக்கைகளை சமர்ப்பிக்காத நிலை தொடரக்கூடாது எனவும், நிர்ணயிக்கப்பட்ட தரங்களை மீறும் நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் எச்சரித்தார்.
தரவுகள், ஆதாரங்கள் மற்றும் அறிவியல் அணுகுமுறையின் அடிப்படையில் அரச தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்திய பிரதமர், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு காலத்திற்கு ஏற்ப திறமையான தொழில்வல்லுநர்களை உருவாக்குவதில் CMA நிறுவனம் வழங்கும் பங்களிப்பையும் பாராட்டினார்.
இந்நிகழ்வில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.













