மொராக்கோவிலிருந்து பல்லாயிரக்கணக்கான ஆப்பிரிக்கப் புலம்பெயர்ந்தோர் ஸ்பெயினின் செவுட்டா (Ceuta) பகுதிக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியதால் எழுந்த கடுமையான எல்லை நெருக்கடியைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியம் வரும் செவ்வாய்க்கிழமை (4) அவசர சிறப்பு உச்சிமாநாட்டைக் கூட்ட முடிவு செய்துள்ளது.
புலம்பெயர்ந்தோர் தொடர்பான ஸ்பெயின் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தவறாகப் புரிந்துகொண்டதன் காரணமாக, கடந்த புதன்கிழமை முதல் பல்லாயிரக்கணக்கானோர் கடலைக் கடந்தும் எல்லைகளை நடந்தும் ஸ்பெயினுக்குள் ஊடுருவ முயன்றனர்.
இதில் கடலைக் கடக்க முயன்ற பலர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இந்த அவசரநிலை குறித்து விவாதிக்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரதிநிதிகள் குழு காணொளி வாயிலாக முதற்கட்ட ஆலோசனையை நடத்தியது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் 22 உறுப்பு நாடுகளின் தலைவர்கள், இத்தகைய கட்டுப்பாடற்ற எல்லை மீறல்களை உடனடியாகத் தடுக்க உறுதியான நடவடிக்கை தேவை என்றும், சட்டவிரோதக் குடியேற்றங்களை இரக்கமின்றி எதிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் அயர்லாந்து, செவ்வாய்க்கிழமை தீர்க்கமான கூட்டத்தைக் கூட்டியுள்ளது.
இதனிடையே, கடந்த சில நாட்களில் சட்டவிரோதமாக நுழைந்த சுமார் 60,000 புலம்பெயர்ந்தோரில் பெரும்பாலோர் ஏற்கனவே அங்கிருந்து வெளியேற்றப்பட்டு விட்டதாகவும், செவுட்டா பிராந்தியத்தில் நிலவிய பதற்றம் தற்போது படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாகவும் ஸ்பெயின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


















