சித்த ரன்கடு பத்தினி தேவாலயத்தின் தீர்த்த உற்சவ வருடாந்த பெரஹெரா காரணமாக இன்று (16) கடுவெல பகுதியைச் சுற்றி விசேட போக்குவரத்து திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தேவாலயத்தின் ஊர்வலம் இன்று காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வீதி உலா வரவுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளதுடன் இந்த ஊர்வலம் தேவாலயத்திற்கு அருகில் தொடங்கி 143 அவிசாவளை – கொழும்பு பேருந்து வீதி வழியாக கடுவெல ராஜசிங்க பாலத்தின் மீது பயணித்து பண்டாரவத்தை, பியகம பகுதிக்கு சென்று தீர்த்த உற்சவ சடங்கு நிறைவடைந்த பின்னர், மீண்டும் அதே வீதி வழியாக கடுவெல சந்தியைக் கடந்து தேவாலயத்தை சென்றடைய உள்ளது.
இதற்கமைய, ஊர்வலம் செல்லும் காலப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அப்பகுதி வழியாகப் பயணிக்கும் சாரதிகள் மற்றும் பொதுமக்களுக்கு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அதன்படி , 143 – அவிசாவளை – கொழும்பு பேருந்து வீதியில் வெலே சந்தியிலிருந்து போக்குவரத்து கட்டுப்படுத்தப்படும் வேளையில், மாற்று வழிகளாக 697 பேருந்து வீதியில் பட்டியவத்தை வீதி வழியாக 177 கடுவெல – கொள்ளுப்பிட்டி பேருந்து வீதியை அடைந்து, மாலபே திசையை நோக்கி உள்ள ராஜசிங்க மாவத்தை வழியாக மீண்டும் 143 அவிசாவளை – கொழும்பு பேருந்து வீதியை அடைந்து பயணிக்க முடியும்.







