இலங்கையின் ஈட்டி எறிதல் நட்சத்திர வீரர் ருமேஷ் தரங்கவின் உலக நம்பர் 1 தரவரிசை ஆபத்துக்குள்ளாகும் நிலை உருவாகியுள்ளது.
ஐரோப்பிய தடகளப் போட்டியில் ஜெர்மனியின் ஜூலியன் வெபர் சனிக்கிழமை (15) 90.40 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்து சிறப்பான சாதனை படைத்துள்ளார்.

ஆண்கள் ஈட்டி எறிதல் பிரிவில் தற்போது உலக தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள வெபர், ருமேஷ் தரங்காவின் மிக நெருங்கிய போட்டியாளராகக் கருதப்படுகிறார்.
இந்த 90.40 மீற்றர் எறிதல் மூலம் வெபரின் தரவரிசைப் புள்ளிகள் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால், உலக தடகள சம்மேளனம் (World Athletics) அடுத்ததாக தரவரிசையை புதுப்பிக்கும் போது ருமேஷின் முதலிடத்திற்கு அழுத்தம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், உலக தரவரிசை ஒரு வீரரின் நீளமான எறிதலை மட்டும் அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படுவதில்லை.
போட்டிகளில் பெற்ற செயல்திறன் புள்ளிகள் மற்றும் இடப்பிடிப்பு புள்ளிகளும் கணக்கில் கொள்ளப்படுவதால், வெபர் முதலிடத்துக்கு முன்னேறுவாரா என்பது அதிகாரப்பூர்வ கணக்கீட்டின் பின்னரே உறுதியாகும்.
இதற்கிடையில், சுவிட்சர்லாந்தின் லோசான் நகரில் ஆகஸ்ட் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள டயமண்ட் லீக் தொடரில் ருமேஷ் தரங்காவும் ஜூலியன் வெபரும் நேருக்கு நேர் மோதவுள்ளனர்.
அந்தப் போட்டியில் வெபரை விட முன்னிலையில் நிறைவடைவதன் மூலம் தனது உலக நம்பர் 1 தரவரிசையை மேலும் வலுப்படுத்தும் வாய்ப்பு ருமேஷுக்கு உள்ளது.
உலக தரவரிசையின் உச்சியை அடைந்துள்ள ருமேஷ் தரங்காவின் சாதனை இலங்கை தடகள வரலாற்றில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகின்ற நிலையில், லோசான் டயமண்ட் லீக் போட்டி உலக நம்பர் 1 இடத்திற்கான போராட்டத்தில் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.














