இரண்டு நாட்களுக்கு முன்பு திடீர் வெள்ளத்தால் பேரழிவிற்குள்ளான நேபாள நகரங்களில், கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி மீட்புக் குழுவினர் சேறு மற்றும் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேவேளையில், உயிருடன் இருப்பவர்களைக் கண்டறிவதற்கான நம்பிக்கை மங்கிவரும் நிலையில், மீண்டும் வெள்ளம் ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளையும் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
நேபாளத்தில் இன்று (28) காலை உறுதிப்படுத்தப்பட்ட நிலவரப்படி பேரிடரினால் பதிவான உயிரிழப்புகளின் எண்ணிக்கை 389-ஆக இருந்தது.
மேலும், நேபாளம் மற்றும் அண்டை பகுதியான திபெத்தில் சுமார் 1,000 பேர் காணாமல் போயுள்ளனர்.
புதன்கிழமை காலை நிகழ்ந்த பனிப்பாறை சரிவு காரணமாக, பாறைகள், பனி, சேறு மற்றும் சிதைவுகள் கலந்த பெரும் வெள்ளப்பெருக்கு இமயமலைப் பகுதி நதி அமைப்புகள் வழியாகக் கீழே பாய்ந்து சென்று பேரழிவினை ஏற்படுத்தியது.

காத்மாண்டுவையும் திபெத்தின் லாசாவையும் இணைக்கும், மலையேற்றப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்களிடையே பிரபலமான பாதையில் பாய்ந்த வெள்ளம், கிராமங்கள் மற்றும் பள்ளத்தாக்குகள் வழியாகச் சென்று மின் நிலையங்கள், சாலைகள் மற்றும் பாலங்களை அழித்தது.
காணாமல் போனவர்களில் குறைந்தது 540 பேர் வெளிநாட்டினர் ஆவர்.
நேபாளத்தில், நகரங்கள் மற்றும் பள்ளத்தாக்குகளில் சிக்கித் தவித்த ஆயிரக்கணக்கானோரைத் தேடவும் அவர்களுக்கு அவசரக்காலப் பொருட்களை வழங்கவும் அதிகாரிகள் ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
அதேவேளையில், மோப்ப நாய்களின் உதவியுடன் மீட்புக் குழுவினர் சமவெளிப் பகுதிகளுக்கு அடித்துச் செல்லப்பட்ட பலரது உடல்களை மீட்டனர்.
தற்போது கிளறப்பட்டுள்ள பெருமளவிலான நீரும் குப்பைக் கழிவுகளும் மற்றொரு பேரிடரைத் தூண்டும் அபாயத்தை உருவாக்கியுள்ளன.
வெள்ளம் பாதித்த பகுதியில் குப்பைக் கழிவுகளால் ‘போட்டுகோஷி’ (Bhotekoshi) ஆறு தடுக்கப்பட்டு உருவான ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாகவும், அது உடைப்பெடுக்கும் அபாயம் இருப்பதாகவும் நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது.
அதேவேளையில் நேபாள எல்லைக்கு அப்பால் உள்ள சீனாவோ, அடுத்த மூன்று நாட்களில் சுமார் 30 இலட்சம் கன மீட்டர் தண்ணீர் (இது ஒலிம்பிக் அளவிலான 1,200 நீச்சல் குளங்களின் கொள்ளளவுக்குச் சமம்) ஏற்கனவே அணையால் தடுக்கப்பட்டுள்ள ஒரு ஏரிக்குள் பாயக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 1-ஆம் திகதி அளவில் நீரோட்டம் உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அந்த ஏரி உடைப்பெடுப்பதற்கான அதிக வாய்ப்பு உள்ளதாக சீன நீர் வள அமைச்சகத்தை மேற்கோள்காட்டி அந்நாட்டு அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.












