தமிழகம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட ‘சிங்கப்பெண்’ சிறப்புப் படை, மாநிலத்தின் 12,921 முக்கிய இடங்களை அடையாளம் கண்டு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் 12,921 இடங்கள் கண்டறியப்பட்டு, அங்குச் சிறப்புப் படையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
பெண் காவலர்களை முதன்மையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இக்குழுவினர், குற்றச் செயல்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் பொது இடங்களில் தொடர் ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை முன்கூட்டியே தடுத்தல் மற்றும் அவசர காலங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவிகளை வழங்குதல் ஆகியவற்றை முதன்மை இலக்காகக் கொண்டு இந்தப் படை செயல்பட்டு வருகிறது.
பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தவும், அவர்கள் அச்சமின்றி நடமாடவும் இந்த திட்டம் பெரிதும் துணைபுரியும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

















