அமெரிக்காவில் நோயாளிகளை மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்வதற்காகப் பயணித்த சிறிய ரக விமானமொன்று விபத்தில் சிக்கியதில் 4 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் அரிசோனா மாகாணம், சின்லி நகரில் உள்ள விமான நிலையத்தில் நோயாளியை ஏற்றுவதற்காக நியூ மெக்சிகோவின் அல்புகியூர்கியில் இருந்து புறப்பட்ட தனியார் சிறிய ரக மருத்துவ நோயாளர் காவு விமானம் ஒன்று நேற்று (05) விபத்துக்குள்ளாகியதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
இது அல்புகியூர்கியை தளமாகக் கொண்ட CSI Aviation நிறுவனத்திற்கு சொந்தமான Beechcraft 300 ரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த விமானம் சின்லி முனிசிபல் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது, ஓடுதளத்தில் விழுந்து தீப்பிடித்ததாக நவாஜோ பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், நவாஜோ நேஷன் தலைவர் பூ நைக்ரென், இந்த விபத்து குறித்து தனது இரங்கலை தெரிவித்து, “உயிர்களைக் காப்பாற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்களின் இழப்பு மிகுந்த வேதனையை அளிக்கிறது” என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவராத நிலையில் அமெரிக்க பயணப் போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB)மற்றும் கூட்டாட்சி விமானப் போக்குவரத்து நிர்வாகம் (FAA)ஆகியவை விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


















