சிறைத்தண்டனை அனுபவித்து வரும் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிரான வழக்கில் ஆவணங்களை அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கில் ஆவணங்களை அழைக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (06) உத்தரவிட்டது.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது சதோச நிறுவனம் மூலம் 14,000 கேரம் பலகைகள் மற்றும் 11,000 தாம் பலகைகளை இறக்குமதி செய்து, அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் மகிந்த ராஜபக்ஷவின் அரசியல் நடவடிக்கைகளுக்கு விநியோகித்ததன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாகக் குற்றம்சாட்டி இருவரும் தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, நளின் பெர்னாண்டோ மற்றும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள விளையாட்டுத்துறை அமைச்சின் முன்னாள் செயலாளர் ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் நந்த மல்லவராச்சி ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது.
இதன்போது பட்டியலிடப்பட்ட ஆவணங்கள் அல்லது அவற்றின் அசல் நகல்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பில் இருந்தால், இன்றிலிருந்து ஒரு வாரத்திற்குள் அவற்றை நீதிமன்றப் பதிவாளரிடம் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (06) உத்தரவிட்டுள்ளது.















