மனிதனைப்போன்ற புதிய இனம் பூமியில் இருந்துள்ளதாகவும் அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கடந்த 2006ம் ஆண்டு சீனாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள ஹுவாலாங்டோங் குகையில் தொல்லியல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில், சுமார் 3 லட்சம் வருடங்களுக்கு முந்தைய மனிதர்களின் எச்சங்களை கண்டுபிடித்தனர்.
இதன் மீது நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வுகள், புதிய மனித இனம் இருந்ததற்கான ஆதாரமாக தெரிவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பொதுவாக குரங்கிலிருந்து மனிதர்கள் வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், மனிதர்களாக நாம் ஒருவர் மட்டும் பரிணாமம் அடையவில்லை. நம்முடன் வேறு சில இனங்களும் உருவானது.
அவையெல்லாம் காலப்போக்கில் அழிந்து நாம் மட்டும் மனிதனாக தனித்து இருக்கிறோம். இதை விஞ்ஞானிகள் ஆய்வின் மூலம் நிரூபித்திருக்கின்றனர்.
ஆனால் இப்படி பட்டியலிடப்பட்ட இனங்களை தவிர புதிய இனம் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக விஞ்ஞானிகள் தற்போது கூறியிருக்கின்றனர்.
2006ம் ஆண்டு நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வில் 16 மனிதர்களின் மண்டை ஓடுகள், எலும்புக்கூடுகள் கிடைத்தன.
இத்தனை நாட்கள் வரை இவை எல்லாவற்றையும் ஆய்வு செய்த விஞ்ஞானிகள், இப்போது அந்த மண்டை ஓடுகளின் பற்களை ஆய்வு செய்திருக்கின்றனர்.
மொத்தம் 21 மனித பற்களை கண்டுபிடித்தனர். இதன் மீது நடத்தப்பட்ட ஆய்வுகள் ‘மனிதப் பரிணாம வளர்ச்சி இதழில்’ வெளியாகியுள்ளன.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் விடயங்கள் பற்றி பார்ப்போம்,
குறித்த பற்களுக்கு சொந்தமான மனித இனம் ‘மத்திய பிளீஸ்டோசீன்’ காலத்தில் வாழ்ந்தவை.
இன்றைய திகதியில் இருந்து சுமார் 781,000 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்திலிருந்து 126,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை நீடித்த புவியியல் காலத்தைதான் ‘மத்திய பிளீஸ்டோசீன்’ காலம் என்று கருதப்படுகிறது.
இந்த காலத்தில்தான் ஹோமோ எரக்டஸ் போன்ற இனங்கள் மறைந்து, நவீன மனிதனின் மூதாதையர்களான ஹோமோ ஹெய்டெல்பெர்கென்சிஸ் மற்றும் நியாண்டர்தால் போன்ற இனங்கள் தோண்றின.
ஆனால் இந்த பற்கள் மேலே குறிப்பிட்ட எந்த இனத்துடனும் பொருந்தி போகவில்லை.
மற்ற இன மனிதர்களின் பற்களை போல இது இல்லை. இது தனித்துவமாக இருக்கிறது. அதாவது 16 மனித பற்கள் கண்டுபிடிக்கப்பட்ட மண்டை ஓடுகளில் மூன்றாவது கடைவாய்ப்பற்கள் (ஞானப்பற்கள்) குறிப்பிடத்தக்க அளவில் சிறியதாக உள்ளன.
இது நவீன மனிதர்களில் பொதுவாகக் காணப்படும் ஒரு அம்சம். நமக்கு இப்படித்தான் இருக்கும். ஏனெனில் உணவுப் பழக்கவழக்க மாற்றங்களுக்கு ஏற்ப, தாடை சுருங்கியிருக்கிறது.
ஆனால் கடைவாய்ப்பற்களின் வேர்கள் தடிமனாகவும் வலுவாகவும் இருந்திருக்கின்றன. இதுதான் விஞ்ஞானிகளை குழப்புகிறது.
இது சுமார் 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே ஆசியாவிற்கு குடிபெயர்ந்த ஹோமோ எரக்டஸ் போன்ற பழமையான மனித இனத்திற்குதான் இப்படி இருக்கும்.
அப்படியெனில் ஒரே இனத்தில் ஒரு பல் நவீன மனிதர்களை போலவும், ஒரு பல் பழமையான மனிதர்களை போலவும் இருக்கிறது என அர்த்தம்.
இது எப்படி சாத்தியம்?
அப்படியெனில் நமக்கு தெரியாத, நாம் கண்டுபிடிக்காத ஒரு தனி மனித இனம் வாழ்ந்து மறைந்திருக்கிறதா? என்று கேள்வி எழுந்திருக்கிறது.
பற்களில் மட்டுமல்லாது தடை மற்றும் உடல் அமைப்புகளிலும் இந்த முரண்பாடுகள் இருக்கின்றன. எனவே இது தொடர்பான ஆய்வை விஞ்ஞானிகள் தீவிரப்படுத்தியிருக்கின்றனர்.
இது எப்படி சாத்தியம் என்பதற்கு சில காரணங்களை ஆய்வாளர்கள் யூகித்துள்ளனர்.
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகூடு, அங்கீகரிக்கப்படாத ஒரு புதிய இனத்தை சேர்ந்ததாக இருக்கலாம். அல்லது நவீன மனிதர்களுடன் நெருங்கிய தொடர்புடைய ஒரு கிளையைக் குறிக்கலாம்.
இது கிழக்கு ஆசியாவில் தனிமைப்படுத்தப்பட்டு பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கலாம்.
இந்த மரபு ஹோமோ சேபியன்ஸ் கிளையிலிருந்து ஆரம்பத்திலேயே பிரிந்து, நியாண்டர்தால் அல்லது டெனிசோவன் இனங்களிலிருந்து வேறுபட்டதாக இருந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் யூகித்துள்ளனர்.
















