பொதுத் தேர்தலில் பெரும்பான்மையைப் பெறுவதற்கு போதுமான இடங்களை பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (BNP) வென்றதை அடுத்து, தாரிக் ரஹ்மான் பங்களாதேஷின் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
60 வயதான ரஹ்மான், நாட்டின் அரசியலில் பல தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்தி வரும் செல்வாக்கு மிக்க ஜியா குடும்பத்தின் முக்கிய தலைவராக உள்ளார்.
தற்சமயம் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள அவர், நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதிலும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதிலும், ஆடைத் துறை உட்பட முக்கிய தொழில்களை மீண்டும் கட்டியெழுப்புவதிலும் உடனடி சவால்களை எதிர்கொள்கிறார்.
பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி நாட்டின் 13 ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தீர்க்கமான வெற்றியைப் பெற்றுள்ளது.
இந்தத் தேர்தல் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் நீண்ட ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த 2024 ஜூலை எழுச்சியைத் தொடர்ந்து நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையைக் குறிக்கிறது.
உள்ளூர் ஊடக அறிக்கைகளின்படி, 300 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 299 இடங்களில் பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சுமார் 210 இடங்களை வென்றுள்ளன.
வேட்பாளர் ஒருவர் இறந்ததால் ஒரு தொகுதியில் வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டது.
அதேநேரம், ஜமாத்-இ-இஸ்லாமி தலைமையிலான இஸ்லாமிய கூட்டணி சுமார் 70 இடங்களை வென்று, புதிய நாடாளுமன்றத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக மாறியது.
ஏனைய சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் சுமார் 17 இடங்களை வென்றனர்.
அறிவிக்கப்பட்ட வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மீது நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால், மூன்று தொகுதிகளின் முடிவுகளை நிறுத்தி வைக்கவும் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்கத்கது.












