ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி, ஒரு வகை நச்சுத் தவளையிலிருந்து (Dart Frog) உருவாக்கப்பட்ட விஷத்தைப் பயன்படுத்தி கொல்லப்பட்டதாக பிரிட்டனும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் தெரிவித்துள்ளன.
சைபீரிய சிறைச்சாலையில் நவால்னி இறந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அவரது உடலில் கண்டெடுக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வு செய்த பின்னர் , பிரிட்டன் மற்றும் அதன் நட்பு நாடுகள் கிரெம்ளின் மீது இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன.
மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் யவெட் கூப்பர், “நவால்னி ரஷ்ய சிறையில் இருந்தபோது, இந்த நச்சைப் பயன்படுத்துவதற்கான வழிமுறை, நோக்கம் மற்றும் வாய்ப்பு ரஷ்ய அரசாங்கத்திற்கு மட்டுமே இருந்தது” என்று கூறினார்.
மாஸ்கோவின் டாஸ் (Tass) செய்தி நிறுவனம் இந்த கண்டுபிடிப்பை “ஒரு தகவல் பிரச்சாரம்” என்று நிராகரித்துள்ளது.
ஆனால், நவால்னியின் உடலில் எபிபெடிடின் (Epibatidine) எனப்படும் நச்சு இருந்ததற்கு ரஷ்யாவினால் விளக்கம் அளிக்க முடியவில்லை என்று கூப்பர் தெரிவித்தார்.
பிரிட்டன், ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து இதுகுறித்த இந்த கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளன.
எபிபெடிடின் என்பது தென் அமெரிக்காவில் உள்ள காட்டு நச்சுத் தவளைகளில் இயற்கையாகக் காணப்படும் ஒரு நச்சு ஆகும்.
கூண்டில் வளர்க்கப்படும் தவளைகள் இந்த நச்சை உற்பத்தி செய்யாது, மேலும் இது ரஷ்யாவில் இயற்கையாகக் கிடைப்பதில்லை.
இதேவேளை, 2020-ஆம் ஆண்டில், நவால்னி நோவிச்சோக் (Novichok) என்ற நரம்பு மண்டலத்தைத் தாக்கும் விஷம் மூலம் தாக்கப்பட்டார்.
ஜெர்மனியில் சிகிச்சை பெற்று ரஷ்யா திரும்பியபோது அவர் கைது செய்யப்பட்டார்.
எபிபெடிடின் (Epibatidine) என்றால் என்ன?
நச்சுயியல் நிபுணர் ஜில் ஜான்சன் கூறுகையில், இந்த நச்சு “மார்பினை விட 200 மடங்கு அதிக வீரியம் கொண்டது” என்று தெரிவித்தார்.
இதன் விளைவுகள்:
* தசைத் துடிப்பு மற்றும் பக்கவாதம்.
* வலிப்பு மற்றும் இதயத் துடிப்பு குறைதல்.
* சுவாசக் கோளாறு மற்றும் இறுதியில் மரணம்.
இந்த அரிதான நரம்பு நச்சு, தென் அமெரிக்காவில் உள்ள ஒரு குறிப்பிட்ட வகை காட்டுத் தவளைகளில் மட்டுமே மிகச்சிறிய அளவில் காணப்படுகிறது.
அந்தத் தவளைகள் உண்ணும் குறிப்பிட்ட உணவின் மூலமே இந்த நச்சு அவற்றின் உடலில் உருவாகிறது என தெரிவித்தார்.
பிரிட்டிஷ் பிரதமர் கீர் ஸ்டார்மர், நவால்னியின் “மாபெரும் துணிச்சலைப்” பாராட்டியதோடு, “உண்மை நிலையை வெளிப்படுத்துவதற்கான அவரது உறுதிப்பாடு ஒரு அழியாத மரபை விட்டுச் சென்றுள்ளது” என்று கூறினார்.
மேலும், ரஷ்யா மற்றும் புடினின் கொலைவெறித் தாக்குதல்களிலிருந்து தங்கள் மதிப்பீடுகளைப் பாதுகாக்கத் தேவையான அனைத்தையும் செய்வதாக அவர் உறுதி அளித்தார்.
ஊழலுக்கு எதிரான போராட்டக்காரரும், ரஷ்யாவின் மிக முக்கியமான எதிர்க்கட்சித் தலைவருமான அலெக்ஸி நவால்னி, 2024 பிப்ரவரி 16 அன்று 47 வயதில் சிறையில் திடீரென காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.















