பிரித்தானியாவின் புதிய குடியுரிமை விதிமுறைகள் இரட்டை குடியுரிமை கொண்ட பெண்களுக்கு பாரபட்சமாக அமைந்துள்ளதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
பிரித்தானியாவின் இரட்டை குடியுரிமைக் கொண்டவர்கள், பிரித்தானியாவிற்குள் நுழையும்போது இனி கண்டிப்பாக பிரித்தானிய கடவுச்சீட்டை சமர்ப்பிக்க வேண்டும் என்ற புதிய விதிமுறை எதிர்வரும் பெப்ரவரி 25 முதல் நடைமுறைக்கு வருகிறது.
இந்த விதியே குறிப்பாகப் பெண்களுக்குப் பாரபட்சமாக இருப்பதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பிரித்தானிய கடவுச்சீட்டு இல்லாதவர்கள், சுமார் 2.3 லட்சம் இலங்கை ரூபாய் செலவில் ‘Certificate of Entitlement’ எனும் சான்றிதழைத் தங்களது இரண்டாவது நாட்டின் கடவுச்சீட்டில் இணைக்க வேண்டும்.
இதன்போது இரண்டு கடவுச்சீட்டுகளிலும் பெயர்கள் துல்லியமாகப் பொருந்த வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கிரேக்கம் மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளில் வசிக்கும் பிரித்தானியப் பெண்களுக்கு இந்தப் புதிய விதி பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
கிரேக்கத்தின் சட்டப்படி, திருமணத்திற்குப் பிறகும் பெண்கள் தங்களது பிறந்த வீட்டுப் பெயரையே வைத்திருக்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது.
அவர்களின் பிரித்தானிய கடவுச்சீட்டில் கணவரின் பெயர் இருந்தால், இரண்டு கடவுச்சீட்டுகளிலும் பெயர்கள் வேறாக இருக்கும்.
இதனால் அவர்கள் பயணிக்க அனுமதி மறுக்கப்படலாம்.
ஸ்பெயின் சட்டப்படி ஒருவருக்கு இரண்டு குடும்பப் பெயர்கள் இருக்கும்.
எனினும் பிரித்தானிய கடவுச்சீட்டில் ஒரு பெயரே இருக்கும். இந்தப் பெயர்ப் பொருத்தமின்மை காரணமாக வானூர்தி நிறுவனங்கள் அவர்களை ஏற்றிச்செல்ல மறுக்க வாய்ப்புள்ளது.
இந்தநிலையில், பெயர்ப் பொருத்தமின்மை தொடர்பான சிக்கல்களைத் தனிப்பட்ட முறையில் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ள அமைச்சகம், வெளிநாட்டு ஆவணங்களில் பெயரை மாற்ற முடியாது என்பதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பித்தால் விதிவிலக்கு அளிக்கப்படும் எனக் கூறியுள்ளது.
இதேவேளை ஐரிஷ் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு இந்தப் புதிய விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.















