சர்ச்சைக்குரிய பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ரகசியக் கோப்புகள் வெளியானதைத் தொடர்ந்து, பில் கேட்ஸ் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தார்.
இந்நிலையில், ‘பில் & மெலிண்டா கேட்ஸ்’ அறக்கட்டளை ஊழியர்களுடனான தனிப்பட்ட சந்திப்பில் அவர் தனது விளக்கத்தை அளித்துள்ளார்.
“எப்ஸ்டீனுடன் நேரம் செலவழித்ததும், எனது அறக்கட்டளை ஊழியர்களை அவருக்கு அறிமுகப்படுத்தியதும் நான் செய்த மிகப்பெரிய தவறு,” என்று அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
2011-ஆம் ஆண்டு முதன்முதலில் எப்ஸ்டீனைச் சந்தித்ததாகக் குறிப்பிட்ட கேட்ஸ், எப்ஸ்டீனின் குற்றப் பின்னணி தெரிந்தும் அவரைச் சரியாக ஆராயத் தவறிவிட்டதாகக் கூறினார்.
“2013-லேயே எனது அப்போதைய மனைவி மெலிண்டா, எப்ஸ்டீன் குறித்து எச்சரித்தார்.
ஏதோ தவறு இருப்பதாக அவர் தொடர்ந்து கவலை தெரிவித்தார். ஆனால், அதையும் மீறி 2014 வரை நான் அவரைச் சந்தித்து வந்தேன்,” என கேட்ஸ் வருத்தத்துடன் தெரிவித்தார்.
எப்ஸ்டீனுடன் இணைந்து பல நாடுகளுக்குப் பயணம் செய்ததை ஒப்புக்கொண்ட கேட்ஸ், சில முக்கியத் தகவல்களைத் தெளிவுபடுத்தியுள்ளார்:
* எப்ஸ்டீனின் தனிப்பட்ட தீவுக்கு தான் ஒருபோதும் சென்றதில்லை.
* எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட பெண்களுடனோ அல்லது அவரைச் சுற்றியிருந்தவர்களுடனோ தான் எவ்வித நேரத்தையும் செலவிடவில்லை.
* சர்வதேச சுகாதாரத் திட்டங்களுக்கு நிதி திரட்ட முடியும் என்று எப்ஸ்டீன் கூறியதாலேயே அவருடன் கூட்டங்களில் பங்கேற்றதாகக் கூறினார்.
தனக்கு இரு ரஷ்யப் பெண்களுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்ததை பில் கேட்ஸ் ஒப்புக்கொண்டார்.
இருப்பினும், அந்தப் பெண்களுக்கும் எப்ஸ்டீனுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும், தனது தரப்பில் சட்டவிரோதமான செயல்கள் எதுவும் நடைபெறவில்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
தனது தவறான முடிவுகளால் கேட்ஸ் அறக்கட்டளையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறிய அவர், இதில் சிக்கிய மற்றவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்தார்.
2019-இல் சிறையில் தற்கொலை செய்துகொண்ட எப்ஸ்டீனுடனான தொடர்பு, தனது வாழ்க்கையின் ஒரு கசப்பான பாடம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.













