மார்ச் 1ஆம் திகதி முதல், இந்தியாவில் வாட்ஸ்அப் பயன்பாட்டில் ‘சிம் பைண்டிங்’ (SIM Binding)என்ற முக்கிய பாதுகாப்பு அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மத்திய அரசின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களுக்கு இணங்க இந்த மாற்றத்தை Meta Platforms Inc நிறுவனத்தின் WhatsApp செயலி கொண்டு வருகிறது.
‘சிம் பைண்டிங்’ முறையின் கீழ், பயனரின் வாட்ஸ்அப் கணக்கு அவர் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணின் சிம் கார்டுடன் நேரடியாக இணைக்கப்படும். இதன் மூலம் போலி சிம், OTP மோசடி, கணக்கு திருட்டு போன்ற இணைய குற்றச்செயல்களை குறைப்பதே நோக்கமாகும். பயனர் தமது எண்ணை மாற்றினால் அல்லது புதிய சாதனத்தில் உள்நுழைந்தால், சிம் அங்கீகாரம் கட்டாயமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஒரே வாட்ஸ்அப் கணக்கை பல்வேறு சாதனங்களில் பயன்படுத்தும் வசதியும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதன் மூலம், பயனர் தமது மொபைல் எண்ணை முதன்மை சாதனத்தில் பதிவு செய்தபின், கணினி, டேப்லெட் உள்ளிட்ட கூடுதல் சாதனங்களிலும் தனித்தனி இணைப்புகளின் மூலம் பாதுகாப்பாக பயன்படுத்த முடியும். இவ்வாறு பல்சாதன அணுகலை அனுமதிப்பதன் மூலம் தொழில் மற்றும் தனிப்பட்ட பயன்பாட்டில் சுலபத்தன்மை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
உலகளவில் சுமார் 300 கோடி பயனர்களைக் கொண்ட வாட்ஸ்அப், இந்தியாவில் மிகப்பெரிய பயனர் அடிப்படை கொண்ட செயலிகளில் ஒன்றாகும். புதிய பாதுகாப்பு மாற்றம் பயனர்களின் தரவு பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
இந்த மாற்றம் தானாகவே அமலுக்கு வரும் நிலையில், பயனர்கள் தங்கள் செயலியை சமீபத்திய பதிப்புக்கு மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என நிறுவனத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய அம்சம் குறித்த கூடுதல் விளக்கங்களை விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.














