குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என அழைக்கப்படும் பிள்ளையானின் அடிப்படை உரிமை மனுவை இம்மாதம் 18ஆம் திகதி அழைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எந்தவொரு நியாயமான காரணமுமின்றி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தாம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதற்கு எதிராக, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று (09) உயர் நீதிமன்றத்தில் அழைக்கப்பட்ட போது, முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை கருத்திற்கொண்ட மூவர் கொண்ட நீதியரசர்கள் குழாம், இதனை விசாரணைக்காக வரும் 13ஆம் திகதி அழைப்பதற்கும் உத்தரவிட்டது.
இதேவேளை, இந்த மனுவின் பிரதிவாதிகளாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர், பொலிஸ் மா அதிபர், சட்டமா அதிபர் உள்ளிட்ட குழுவினர் பெயரிடப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் எந்தவொரு நியாயமான காரணமுமின்றி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாம் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பது சட்டத்திற்குப் புறம்பானது எனவும், இதன் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் தீர்ப்பளிக்குமாறு மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.












