ஸ்காட்லாந்தில் ஆசிரியர்களின் பணிப்பளுவைக் குறைக்கக் கோரி ஆறு மாகாணங்களில் நடத்தப்படவிருந்த வேலைநிறுத்தப் போராட்டங்கள், தொழிற்சங்கத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையே எட்டப்பட்ட ஆரம்பகட்ட உடன்படிக்கையைத் தொடர்ந்து தவிர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிரியர்கள் வகுப்பறைகளில் மாணவர்களுடன் செலவிடும் நேரத்தைக் குறைத்து, பாடத் தயாரிப்பு மற்றும் இதர பணிகளுக்காக மேலதிகமாக 90 நிமிடங்கள் (Non-contact time) வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஸ்காட்லாந்து கல்வி நிறுவனம் (EIS) போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.
இது தொடர்பாக ஸ்காட்லாந்து அரசாங்கத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ஒரு வரைவு உடன்படிக்கை (Draft agreement) எட்டப்பட்டுள்ளது.
இந்த உடன்பாடு எட்டப்படாவிட்டால், கிளாஸ்கோ (Glasgow), ஈஸ்ட் ரென்ஃபுரூஷயர் (East Renfrewshire), டண்டீ (Dundee), ஃபைஃப் (Fife), பெர்த் மற்றும் கின்ரோஸ் (Perth and Kinross) மற்றும் மோரே (Moray) ஆகிய ஆறு மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் அடுத்த வாரம் மூடப்படும் அபாயம் இருந்தது.
இதேவேளை,ஈஸ்ட் ரென்ஃபுரூஷயரில் மார்ச் 17 மற்றும் 23 ஆகிய திகதிகளில் பாடசாலைகளை மூட ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது.
கடந்த 2021-ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியின்படி, ஆசிரியர்களின் பணிப்பளுவைக் குறைத்து மேலதிக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பதே தொழிற்சங்கத்தின் பிரதான கோரிக்கையாகும்.
ஆசிரியர்கள் மாலை நேரங்களிலும் வார இறுதி நாட்களிலும் ஊதியமின்றி வேலை செய்வதைத் தடுக்கவே இந்த 90 நிமிட மேலதிக ஓய்வு நேரம் கோரப்பட்டது.
இந்த வரைவு உடன்படிக்கையை உள்ளூராட்சி அமைப்புகளின் பிரதிநிதித்துவக் குழுவான ‘கொஸ்லா’ (Cosla) நாளையதினம் கூடி ஆராயவுள்ளது.
“இந்த உடன்படிக்கை அங்கீகரிக்கப்பட்டால் மட்டுமே திட்டமிடப்பட்ட போராட்டங்கள் உத்தியோகபூர்வமாக ரத்து செய்யப்படும் எனவும் அதுவரை எமது போராட்டத் திட்டங்களில் மாற்றமில்லை எனவும் ஸ்காட்லாந்து கல்வி நிறுவன பொதுச் செயலாளர் (Andrea Bradley) ஆண்ட்ரியா பிராட்லி தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களின் பணி நேரத்தைக் குறைப்பதில் உள்ள ‘நிதி மற்றும் நடைமுறைச் சிக்கல்கள்’ குறித்து கொஸ்லா அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.
இருப்பினும், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதைத் தவிர்க்க அனைத்துத் தரப்பினரும் இணங்கக்கூடிய ஒரு தீர்வை எட்ட விரும்புவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.













