வேல்ஸின் லம்பீட்டர் (Lampeter) பகுதியில், வளர்ப்பு நாய்கள் கடித்ததில் 68 வயது நபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை வெளியானது.
கடந்த 2022-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், லம்பீட்டர் பகுதியில் வசித்து வந்த 68 வயதான வில்லியம் ஜான் ஜோன்ஸ் (William John Jones), தனது வீட்டில் வளர்க்கப்பட்ட மூன்று பிரிட்டிஷ் புல்டாக் (British Bulldogs) இன நாய்கள் கடித்ததில் உயிரிழந்தார்.
டவுன் சிண்ட்ரோம் (Down’s syndrome) பாதிப்புடைய இவர், தனது மருமகளும் பராமரிப்பாளருமான குவென்பேர் பெஞ்சமின் (Gwenfair Benjamin) என்பவருடன் வசித்து வந்துள்ளார்.
அபெரிஸ்ட்வித் (Aberystwyth) நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற விசாரணையில் அவரது மரணத்துக்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டன.
அதன்படி, சம்பவத்தன்று மதியம், பொருட்களைச் சேதப்படுத்துகின்றன என்பதற்காக இரண்டு இளம் நாய்களை பெஞ்சமின் வீட்டின் பின்புறம் பூட்டி வைத்துவிட்டு வெளியே சென்றுள்ளார்.
வீட்டில் தனியாக இருந்த ஜோன்ஸ், ஐஸ்கிரீம் எடுப்பதற்காக பின்புறம் சென்றபோது, பூட்டி வைக்கப்பட்டிருந்த நாய்களை தெரியாமல் வீட்டுக்குள் அனுமதித்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
மாலை 5:00 மணியளவில் பெஞ்சமின் வீடு திரும்பியபோது, ஜோன்ஸ் வரவேற்பறையில் காயங்களுடன் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இந்நிலையில் மருத்துவப் பரிசோதனை அறிக்கையின்படி, ஜோன்ஸின் உடலில் நாய்கள் கடித்ததற்கான 38 காயங்கள் காணப்பட்டன.
அவரது கால்களில் ஏற்பட்ட ஆழமான காயங்கள் காரணமாக அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டதே அவரது மரணத்திற்கு முக்கிய காரணமாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், அவருக்கு இதயத் தமனி தொடர்பான பாதிப்புகளும் (Atherosclerosis) இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்த வழக்கை விசாரித்த மரண விசாரணை அதிகாரி பீட்டர் பிரண்டன் (Peter Brunton), இந்தச் சம்பவத்தை ஒரு “விபத்து” (Accident) எனப் பதிவு செய்துள்ளதுடன் நாய்கள் ஏன் திடீரென இவ்வாறு நடந்துகொண்டன என்பதற்குத் தெளிவான விளக்கம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய நாய்கள் ‘ஆபத்தான நாய்கள் சட்டம் 1991’-ன் கீழ் தடை செய்யப்பட்ட இனங்கள் அல்ல என்பதும் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டது.












