தெற்கு கடற்பகுதியில் இலங்கை கடற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட பல நாள் மீன்பிடிக் கப்பல், பல பில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களையும், ஆயுதங்களையும் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருணா ஜெயசேகர தெரிவித்தார்.
அந்தக் கப்பல் சுமார் 600 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் படிக மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) ஆகியவற்றைக் கொண்டு சென்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன் பெறுமதி 10 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் போது கடற்படை வீரர்கள் எட்டு கைத்துப்பாக்கிகள், இரண்டு T-56 தாக்குதல் துப்பாக்கிகள் மற்றும் ஒரு M16 துப்பாக்கி, வெடிமருந்துகள் மற்றும் மெகசின்களை மீட்டுள்ளனர்.
படகில் இருந்த மொத்தம் 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இலங்கையின் தெற்கே உள்ள சர்வதேச கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையைத் தொடர்ந்து, கைப்பற்றப்பட்ட, பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொட்கள் மற்றும் வெடிமருந்துகளுடன் கைதான சந்தேக நபர்கள் டிகக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
சந்தேகத்திற்குரிய போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கை குறித்து அதிகாரிகள் மேலும் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.












