பிரித்தானியாவின் பணத்தாள்களில் (Banknotes) காலங்காலமாக இடம்பெற்று வந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மனிதர்களின் உருவங்களுக்குப் பதிலாக, இனி உள்நாட்டு வனவிலங்குகளின் உருவங்களை அச்சிட இங்கிலாந்து வங்கி (Bank of England) தீர்மானித்துள்ளது.
இங்கிலாந்து வங்கியின் புதிய அறிவிப்பின்படி, தற்போது புழக்கத்தில் உள்ள 5 பவுண்டு பணத்தாளில் இடம்பெற்றுள்ள முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலின் (Sir Winston Churchill) உருவம் நீக்கப்படவுள்ளது.
அவருக்குப் பதிலாக இங்கிலாந்தின் இயற்கை வளத்தைப் பிரதிபலிக்கும் வகையில் வனவிலங்குகளின் படங்கள் இனி இடம்பெறவுள்ளன.
கடந்த 2025-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பொதுமக்களுடனான ஆலோசனையில், பணத்தாள்களில் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த கருப்பொருள்களே (Theme) அதிக வரவேற்பைப் பெற்றன.
இதன் விளைவாகவே, வரலாற்று நாயகர்களுக்குப் பதிலாக விலங்கினங்களைச் சேர்க்க வங்கி முடிவு செய்துள்ளது.
இது ஒரு “முக்கியமான” மற்றும் “காலந்தாழ்ந்த” நடவடிக்கை என வங்கியின் வனவிலங்கு நிபுணர்கள் குழுவில் இடம்பெற்றுள்ள பிரபல பறவை ஆர்வலர் நதீம் பெரேரா தெரிவித்துள்ளார்.
புதிய 5, 10, 20 மற்றும் 50 பவுண்டு பணத்தாள்களில் எந்தெந்த விலங்குகளின் படங்கள் இடம்பெற வேண்டும் என்பது குறித்து விரைவில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படவுள்ளது.
இங்கிலாந்தின் பூர்வீக உயிரினங்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படும் என வங்கி உறுதிப்படுத்தியுள்ளது.
இரண்டாம் உலகப் போரின் நாயகராகக் கருதப்படும் சர்ச்சிலின் உருவம் மாற்றப்படுவது ஒரு முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.
ஏற்கனவே மன்னர் சார்லஸின் உருவம் பொறிக்கப்பட்ட பணத்தாள்கள் புழக்கத்திற்கு வந்துள்ள நிலையில், மறுபுறம் உள்ள உருவப்படங்களில் இந்த மாற்றம் செய்யப்படவுள்ளது.















