ஈரானுக்கு எதிரான தனது நடவடிக்கையில் அடுத்தகட்ட பணிகளுக்கு அமெரிக்க இராணுவம் தயாராகி வரும் நிலையில், மத்திய கிழக்கில் தனது செயல்பாடுகளை வலுப்படுத்த ஆயிரக்கணக்கான அமெரிக்கப் படைகளை நிலைநிறுத்துவது குறித்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஈரான் போர் மூன்றாவது வாரத்தில் நுழைந்துள்ள நிலையில், அமெரிக்க நடவடிக்கைகளை விரிவுபடுத்துவது குறித்து ட்ரம்ப் பரிசீலித்து வரும் வேளையில், இந்தப் படைக் குவிப்புகள் அவருக்குக் மேலதிக வாய்ப்புகளை வழங்க உதவக்கூடும்.
இந்த வாய்ப்புகளில் ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் கப்பல்களுக்குப் பாதுகாப்பான பாதையை உறுதி செய்வதும் அடங்கும்.
இந்தப் பணி முதன்மையாக வான் மற்றும் கடற்படைகள் மூலம் நிறைவேற்றப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனால், நீரிணையை பாதுகாப்பது என்பது ஈரானின் கடற்கரைக்கு அமெரிக்கப் படைகளை அனுப்புவதையும் குறிக்கலாம் என்று இரண்டு அமெரிக்க அதிகாரிகள் உட்பட நான்கு வட்டாரங்கள் கூறியுள்ளன.
ஈரானின் 90% எண்ணெய் ஏற்றுமதிக்கான மையமாக விளங்கும் கார்க் தீவுக்குத் தரைப்படைகளை அனுப்புவதற்கான வழிகள் குறித்தும் ட்ரம்ப் நிர்வாகம் விவாதித்துள்ளது என, இவ்விவகாரத்தை நன்கு அறிந்த மூன்று நபர்களும் மூன்று அமெரிக்க அதிகாரிகளும் கூறியுள்ளனர்.
அத்தகைய ஒரு நடவடிக்கை மிகவும் அபாயகரமானது என்று அதிகாரிகளில் ஒருவர் கூறினார்.
ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் அந்தத் தீவை அடையும் திறன் ஈரானிடம் உள்ளது.
மார்ச் 13 அன்று அமெரிக்கா அந்தத் தீவில் உள்ள இராணுவ இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தியது.
மேலும், அதன் முக்கிய எண்ணெய் உள்கட்டமைப்பையும் தாக்கப்போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.
எனினும், ஈரானின் பொருளாதாரத்தில் அதன் முக்கியப் பங்கைக் கருத்தில் கொண்டு, அத்தீவை அழிப்பதை விட அதைக் கட்டுப்படுத்துவதே சிறந்த தேர்வாகக் கருதப்படும் என்று இராணுவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஈரானுக்கு எதிரான நடவடிக்கைக்கு அமெரிக்கப் பொதுமக்களிடையே குறைந்த ஆதரவு இருப்பதாலும், புதிய மத்திய கிழக்கு மோதல்களில் அமெரிக்காவைச் சிக்க வைக்க மாட்டேன் என்று ட்ரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தில் அளித்த வாக்குறுதிகளாலும், அமெரிக்கத் தரைப்படைகளின் எந்தவொரு பயன்பாடும் – ஒரு குறிப்பிட்ட பணிக்காக இருந்தாலும் கூட – ட்ரம்பிற்கு குறிப்பிடத்தக்க அரசியல் அபாயங்களை ஏற்படுத்தக்கூடும்.
ஈரானின் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்புகளைப் பாதுகாக்க அமெரிக்கப் படைகளை நிலைநிறுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகள் விவாதித்துள்ளனர் என இவ்விவகாரத்தை நன்கு அறிந்தவர்களில் ஒருவர் தெரிவித்தார்.
ஈரானில் எங்கும் தரைப்படைகளை நிலைநிறுத்துவது உடனடி நடவடிக்கை அல்ல என்று அந்த வட்டாரங்கள் நம்பின, ஆனால் அமெரிக்காவின் செயல்பாட்டுத் திட்டமிடலின் குறிப்பிட்ட விவரங்களைப் பற்றி விவாதிக்க மறுத்துவிட்டன.
ஈரானின் யுரேனியம் இருப்புகளைப் பாதுகாக்கும் பணி, அமெரிக்க சிறப்பு நடவடிக்கைப் படைகளுக்குக் கூட மிகவும் சிக்கலானதாகவும் அபாயகரமானதாகவும் இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில், தற்போதைக்கு தரைப்படைகளை அனுப்புவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை, ஆனால் ஜனாதிபதி ட்ரம்ப் புத்திசாலித்தனமாக அனைத்து வாய்ப்புகளையும் தன் வசமே வைத்துள்ளார் என்று பெயர் குறிப்பிட விரும்பாத வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த பெப்ரவரி 28 அன்று போரைத் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா மத்திய கிழக்கில் 7,800-க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளதுடன் இதுவரை 120-க்கும் மேற்பட்ட ஈரானிய கப்பல்களைச் சேதப்படுத்தியுள்ளது ஈரானில் உள்ள சுமார் 50,000 அமெரிக்கப் படைகளை மேற்பார்வையிடும் அமெரிக்க மத்திய கட்டளை மையம் புதன்கிழமை வெளியிட்ட ஒரு தகவல் தாளில் கூறப்பட்டுள்ளது.














