ஈரான் நாட்டுடன் அமெரிக்கா முன்னெடுத்து வரும் பேச்சுவார்த்தைகள் ஆக்கப்பூர்வமாகவும் சாதகமாகவும் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உட்கட்டமைப்புகள் மீதான இராணுவத் தாக்குதல்களை ஐந்து நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
ஈரானின் மின் விநியோகக் கட்டமைப்பை அமெரிக்கா இலக்கு வைத்தால், இஸ்ரேலின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் வளைகுடா பிராந்தியத்திலுள்ள அமெரிக்க இராணுவத் தளங்களுக்கு மின்சாரம் வழங்கும் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த அச்சுறுத்தலைத் தொடர்ந்தே ட்ரம்பின் இந்தத் தீர்மானம் வெளியாகியுள்ளது.
ஈரான் உடனான பேச்சுவார்த்தைகள் இந்த வாரம் முழுவதும் தொடரும் எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி ட்ரம்ப், தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்:
“ஈரானிய மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உட்கட்டமைப்புகள் மீதான அனைத்து இராணுவத் தாக்குதல்களையும் ஐந்து நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு நான் பாதுகாப்புத் துறைக்கு (Department of War) உத்தரவிட்டுள்ளேன். தற்போது நடைபெற்று வரும் சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்களின் வெற்றியைப் பொறுத்தே இந்த இடைநிறுத்தம் நீடிக்கும்.”















