ஈரானின் உள்கட்டமைப்பைத் தாக்குவது குறித்த தனது அண்மைய அச்சுறுத்தலில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை (02) இரவு, தெஹ்ரானில் உள்ள பாலங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களைத் தாக்கி அழிப்பதாக எச்சரித்தார்.
ஈரானில் எஞ்சியிருப்பவற்றை அழிக்கும் வேலையை அமெரிக்க இராணுவம் இன்னும் தொடங்கவே இல்லை.
அடுத்து பாலங்கள், அதன் பிறகு மின் உற்பத்தி நிலையங்கள் இலக்கு என்று அந்த எச்ரிக்கையில அவர் கூறினார்.
போருக்கான காலக்கெடு மற்றும் நோக்கங்களை இதற்கு முன்னர் மாற்றி வந்த ட்ரம்ப், புதன்கிழமை தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில், ஈரான் வொஷிங்டனின் நிபந்தனைகளுக்குப் பணியவில்லை என்றால் போர் தீவிரமடையக்கூடும் என்றும், அதன் எரிசக்தி மற்றும் எண்ணெய் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட வாய்ப்புள்ளது என்றும் கூறியிருந்தார்.
அதன்படி, அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களில் நாங்கள் அவர்களை (ஈரான்) மிகக் கடுமையாகத் தாக்கப் போகிறோம்.
அவர்களுக்கு உரிய கற்காலத்திற்கு அவர்களைத் திரும்பக் கொண்டு செல்வோம் என்று ட்ரம்ப் அந்த உரையில் எச்சரித்திருந்தார்.
அத்துடன், ஈரான் விவகாரத்தில் வாஷிங்டன் தனது இலக்குகளை நிறைவு செய்யும் தருவாயில் இருப்பதாக அவர் கூறியபோதிலும், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான கால அட்டவணையை வெளியிடவில்லை.
இதனிடையே, ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் போர்க்குற்றங்களுக்கு ஒப்பாக அமையக்கூடும் என்று கூறி, அமெரிக்காவைச் சேர்ந்த பல சர்வதேச சட்ட வல்லுநர்கள் வியாழக்கிழமை (2) முன்னதாக வெளியிடப்பட்ட ஒரு பகிரங்கக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
போரில் மனிதாபிமான நடத்தை குறித்த 1949 ஆம் ஆண்டு ஜெனீவா உடன்படிக்கைகள், பொதுமக்களுக்கு அத்தியாவசியமானதாகக் கருதப்படும் இடங்கள் மீதான தாக்குதல்களைத் தடை செய்கின்றன.
ஜெனிவா உடன்படிக்கைகள் மற்றும் கூடுதல் நெறிமுறைகளின்படி, இராணுவ மோதலில் ஈடுபடும் தரப்பினர் பொதுமக்கள் சார்ந்த வசதிகள் மற்றும் இராணுவ இலக்குகள் ஆகியவற்றுக்கு இடையே வேறுபடுத்தி அறிய வேண்டும் என்றும், பொதுமக்கள் சார்ந்த வசதிகள் மீதான தாக்குதல்கள் தடைசெய்யப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.
பெப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியபோது போர் தொடங்கியது.
இதற்குப் பதிலடியாக, தெஹ்ரான் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தளங்களைக் கொண்ட வளைகுடா நாடுகள் மீது தனது சொந்தத் தாக்குதல்களைத் தொடுத்தது.
ஈரானில் அமெரிக்க-இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதல்களாலும், லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களாலும் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதோடு, மில்லியன் கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்தப் போர் எண்ணெய் விலைகளையும் உயர்த்தியுள்ளதுடன், உலகளாவிய சந்தைகளையும் உலுக்கியுள்ளது.
2003 ஆம் ஆண்டு ஈராக் படையெடுப்பிற்குப் பின்னர் தனது நாடு நடத்தும் மிகப்பெரிய இராணுவத் தாக்குதல்கள் குறித்த கவலைகளைத் தணிப்பதற்கு, ட்ரம்ப் இதுவரை முரண்பாடான கருத்துக்களை கூறி வருகிறார்.













