சீனாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கொண்டு வந்த சிகரெட்டுக்களுடன் 5 சீன வர்த்தகர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீனாவிலிருந்து இன்று அதிகாலை 01.10 மணிக்கு வருகை தந்த ‘சைனா ஈஸ்டர்ன்’ விமான சேவைக்குச் சொந்தமான MU-713 என்ற விமானம் மூலம் இவர்கள் நாட்டுக்கு வந்துள்ளனர்.இவர்களது பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சீனாவில் தயாரிக்கப்பட்ட ‘செவன் ஸ்டார்’ ரகத்தைச் சேர்ந்த 52 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியுடைய 34, 800 சிகரெட்டுகள் அடங்கிய 174 கார்டூன்கள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் வெவ்வேறு வயதுடைய சீன வர்த்தகர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
















