யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் பாரிய சுற்றுலா மையம் அமைப்பதற்காக 300 ஏக்கர் காணிகளை தனியார் நிறுவனத்திற்கு வழங்கும் திட்டத்திற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
வடமராட்சி கிழக்கு மணல்காடு, குடத்தனை வடக்கு மற்றும் பொற்பதி ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய 300 ஏக்கர் நிலப்பரப்பில், கோல்வ் (Golf) விளையாட்டுத் திடல் உள்ளிட்ட நவீன சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு மையங்களை அமைப்பதற்கு தனியார் நிறுவனம் ஒன்று ஆர்வம் காட்டி வருகிறது.
இது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (10/04/2026) பொற்பதி கிராமத்தில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் மற்றும் தனியார் நிறுவன பிரதிநிதிகள் தலைமையில் நடைபெற்றது.
இந்தத் திட்டத்திற்காகத் தமது கிராமச் சூழலில் உள்ள காணிகளை வழங்க முடியாது என அப்பகுதி மக்கள் ஒருமனதாகத் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே பல தடவைகள் இவ்வாறான கலந்துரையாடல்கள் மூலம் தமது எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட போதிலும், மீண்டும் மீண்டும் இந்த முயற்சியை முன்னெடுப்பது வருத்தத்திற்குரியது என மக்கள் சுட்டிக்காட்டினர்.
மக்கள் மத்தியில் உரையாற்றிய பிரதேச செயலாளர், குறித்த தனியார் நிறுவனம் மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடுவது குறித்து தனக்கு முன்கூட்டியே அறிவிக்கவில்லை என பகிரங்கமாகத் தெரிவித்தார். அத்துடன், காணியை வழங்க மறுப்பதற்கான காரணங்களை மக்களிடம் கேட்டறிந்தார்.
கிராமத்தின் அன்றாடத் தேவைகளுக்கே நிலப்பரப்பு மிகக் குறைவாக உள்ள நிலையில்
புதிய குடும்பங்களின் நிலை புதிதாகத் திருமணம் செய்து தனிக்குடித்தனம் செல்லும் குடும்பங்களுக்குக் குடியிருப்பதற்கு இதுவரை காணிகள் வழங்கப்படவில்லை.
மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த பிரதேச செயலாளர், காணி இல்லாத குடும்பங்களின் விபரங்கள் மற்றும் எண்ணிக்கையினை அறிக்கையிடுமாறு அந்தந்த கிராம அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
காணி இல்லாத குடும்பங்களுக்கு காணிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டம் மிக விரைவில் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் இதன்போது உறுதி அளித்தார்.
இந்தத் தீர்மானத்தைத் தொடர்ந்து, தனியார் நிறுவனத்தின் சுற்றுலா மையத் திட்டம் அப்பகுதி மக்களின் எதிர்ப்பால் மீண்டும் முடங்கியுள்ளது.















