பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவையின் கடும் அலட்சியம் மற்றும் ஒருங்கிணைப்பு குறைபாடு காரணமாக, 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அந்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பையே கேள்விக்குறியாக்கியுள்ளது.
ஐந்து வயதே ஆன சிறுவன் யூசுப் நசீர், சாதாரண டான்சிலைட்டிஸ்(Tonsillitis)) பாதிப்பால் அவதிப்பட்டு வந்தான். முறையான சிகிச்சைக்காக அவனது குடும்பத்தினர் பலமுறை மருத்துவ உதவியை, நாடியும், நான்கு வெவ்வேறு NHS அமைப்புகள் அவனது பராமரிப்பை ஒருங்கிணைக்கத் தவறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சுவாசக் கோளாறால் அவதிப்பட்ட யூசுப்பிற்கு உரிய நேரத்தில் தீவிர சிகிச்சை அளிக்கப்படாததால், தொற்றின் தீவிரம் அதிகரித்து அந்தச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.’நாங்கள் ஒரு அழகான குழந்தையை இழந்திருக்கிறோம். இது மருத்துவ ரீதியாகத் தடுக்கப்பட வேண்டிய ஒரு மரணம். எங்களைப் போன்ற ஒரு இழப்பு இனி எந்தவொரு குடும்பத்திற்கும் ஏற்படக்கூடாது, ‘ என யூசுப்பின் குடும்பத்தினர் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் தமது மகனின் மரணத்திற்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், மருத்துவ சேவையில் மாற்றத்தைக் கொண்டு வரக் கோரியும் அவர்கள் அயராது போராடி வருகின்றனர்.
இதனிடையே உயிரிழந்த சிறுவன் யூசுப்பின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த பிரித்தானிய சுகாதாரச் செயலாளர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் (Wes Streeting), அவர்களது விடாமுயற்சியைப் பாராட்டினார். ‘உங்கள் மகனுக்காக நீங்கள் முன்னெடுக்கும் இந்தப் போராட்டம், NHS அமைப்பின் கலாச்சாரத்தையே மாற்றிக்கொண்டிருக்கிறது. நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் பொறுப்புக்கூறல் குறித்த புதிய விழிப்புணர்வை இது ஏற்படுத்தியுள்ளது’ என்று அவர் உறுதியளித்தார்.
இதேவேளை, மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதிகள் இல்லாமை மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுகளின் தாமதம் ஆகியவை யூசுப்பின் மரணத்திற்கு முக்கிய காரணங்களாக அமைந்ததுடன் இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், NHS-இல் நிர்வாக ரீதியான பாரிய மாற்றங்களை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு அந்நாட்டு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது













