இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில் 10 வயது சிறுவர்கள் கூட வீட்டை விட்டு வெளியே வரும்போது கைகளில் ஆயுதங்களுடன் வருவதாகத் தற்போதைய ஆவணப்படம் ஒன்று அதிர்ச்சிகரமான உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
பத்திரிகையாளர் நீல் மேக்ஸ் தயாரிப்பில் உருவான இந்த ஆவணப்படம், பிரிஸ்டல் நகரின் தெற்குப் பகுதியில் உள்ள ஹார்ட் கிளிஃப் மற்றும் நோல் வெஸ்ட் ஆகிய பகுதிகளுக்கு இடையே நிலவும் வரலாற்று ரீதியான கோஷ்டி மோதல்களை மையமாகக் கொண்டது.
அத்துடன், இந்த ஆவணப்படத்தில் கத்திக்குத்து சம்பவத்தால் தனது நெருங்கிய நண்பரை இழந்த குத்துச்சண்டை பயிற்சியாளரும் சமூக ஆர்வலருமான செரீனா வீப் முக்கியப் பங்காற்றியுள்ளார். அவரிடம் பேசிய இளைஞர் ஒருவர் கூறுகையில் ‘எதிரி கோஷ்டிகள் வசிக்கும் பகுதிகளுக்குச் செல்லும்போது எனது உண்மையான முகவரியைச் சொல்ல பயமாக இருக்கிறது. உண்மையைச் சொன்னால் நான் குத்தப்படுவேன், இல்லையென்றால் நான் பொய் சொல்ல வேண்டும்’ எனத் தனது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த ஆவணப்படத்தில் பங்கேற்ற மற்றொரு இளைஞர் கூறுகையில், ‘பத்து வயது சிறுவர்கள் கூட வீட்டை விட்டு வெளியே வரும்போது ஆயுதங்களுடன் வருவதை நான் பார்த்திருக்கிறேன். தங்களது அண்ணனோ அல்லது உறவினரோ ஆயுதம் வைத்திருப்பதைக் கண்டு, நாமும் ஏன் அவ்வாறு செய்யக்கூடாது என்ற தவறான எண்ணமே இவர்களைத் தூண்டுகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தங்கள் நண்பர்களை இழக்கும் இளம் தலைமுறையினரின் மனநிலை மற்றும் ஆயுதங்களை ஏந்துவதால் ஏற்படும் விபரீதங்கள் குறித்து இந்தத் திரைப்படம் விரிவாக ஆராய்கிறது. ஈஸ்டன் சமூக மையம் மற்றும் தி வாட்டர்ஷெட் உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதுடன், சமூகத்தில் பெருகி வரும் கத்தி கலாச்சாரம் மற்றும் சிறுவர்கள் வன்முறையில் ஈடுபடுவது குறித்து பெற்றோர்கள் மற்றும் இது அதிகாரிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது














