ஸ்காட்லாந்துக்குத் திடீர் விஜயம் மேற்கொண்ட பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர், ஸ்கொட்டிஷ் தொழிலாளர் கட்சித் தலைவர் அனாஸ் சர்வாரைச் சந்திக்காமல் தவிர்த்தது அந்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் விவகாரம் தொடர்பான பிரான்ஸ் – பிரித்தானிய உச்சிமாநாட்டை முடித்துக்கொண்டு பாரிஸிலிருந்து திரும்பிய பிரதமர் கீர் ஸ்டார்மர், நேற்றையதினம் ஸ்காட்லாந்தில் உள்ள ‘பாஸ்லேன்’ (Faslane) அணுசக்தி கடற்படைத் தளத்திற்கு இரண்டு மணிநேர விஜயத்தை மேற்கொண்டார்.
இதேவேளை, கடந்த பெப்ரவரி மாதம் ஸ்டார்மர் பதவியில் இருந்து விலக வேண்டும் என அனாஸ் சர்வர் கோரிக்கை விடுத்த பின்னர் , பிரதமர் ஸ்காட்லாந்துக்கு விஜயம் மேற்கொண்டமை இதுவே முதல் முறையாகும்.
இந்நிலையில் எதிர்வரும் மே மாதம் ஸ்காட்லாந்து நாடாளுமன்றத் தேர்தல் (Holyrood election) நடைபெறவுள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ள அனாஸ் சர்வாரையோ அல்லது ஏனைய தொழிலாளர் கட்சி சகாக்களையோ பிரதமர் சந்திக்கவில்லை.
இது ஸ்கொட்டிஷ் தொழிலாளர் கட்சிக்குள் இருக்கும் விரிசலை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது.
இதேவேளை, இந்த விவகாரம் குறித்துக் கருத்துத் தெரிவித்த அனாஸ் சர்வர், “அவர் நாட்டின் பிரதமர் என்ற ரீதியில் பாதுகாப்பு தொடர்பான பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
அவரது வேலை நாட்டை ஆள்வது, எனது வேலை ஸ்காட்லாந்தில் ஆட்சியை மாற்றுவது. நான் எனது தேர்தல் பிரசாரத்தில் உறுதியாக இருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
மேலும், ஸ்டார்மரைப் பதவி விலகக் கோரியது தனக்குத் தனிப்பட்ட ரீதியில் வலியைத் தந்தாலும், தனது முடிவில் பின்வாங்கப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும் டவுனிங் ஸ்ட்ரீட் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பாதுகாப்பு மற்றும் தேசப் பாதுகாப்பு தொடர்பான பணிகளுக்காகவே பிரதமர் ஸ்காட்லாந்து சென்றதாகவும், அங்குள்ள வீரர்களுக்கு நன்றி தெரிவிப்பதே பயணத்தின் நோக்கம் என்றும் விளக்கமளித்தார்.
ஹோர்முஸ் நீரிணை பதற்றம் மற்றும் உலகளாவிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பிரதமரின் இந்தப் பயணம் அமைந்திருந்தாலும், சொந்தக் கட்சியினரையே அவர் சந்திக்காமல் சென்றது அரசியல் அரங்கில் விவாதப் பொருளாகியுள்ளது.
















