தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தை முன்னிட்டு, ஈழத் தமிழ் மக்களின் சார்பாக தமிழ்த் தேசியப் பேரவை தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
தமிழக அரசியல் வரலாற்றில் புதிய சாதனை படைத்து, முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள தலைவருக்கு ஈழத் தமிழ் மக்கள் மற்றும் தமிழ்த் தேசியப் பேரவை சார்பில் உற்சாகமான வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து தமிழ்த் தேசியப் பேரவை விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,
தமிழக மக்களும் தலைவர்களும் ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கு எக்காலத்திலும் பெரும் அரணாகத் திகழ்ந்ததை நன்றியுடன் நினைவு கூர்ந்துள்ளனர்.
குறிப்பாக, தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் மீதும், ஈழ மக்கள் மீதும் தமிழகம் காட்டிய அளவற்ற அன்பு வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டவை என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு பின்னரும் ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள பேரவை, புதிய முதலமைச்சரிடம் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் மாற்றம், ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கு புதிய வலுவைத் தரவேண்டும்.
சர்வதேச அரங்குகளிலும், இந்திய மத்திய அரசாங்கத்திடமும் ஈழத் தமிழர்களின் நீதிக்கான குரலாகப் புதிய முதலமைச்சர் ஒலிக்க வேண்டும்.
‘தொப்புள்கொடி உறவுகள்’ என்ற உணர்வோடு, ஈழத் தாயகத்தின் விடியலுக்காகத் தமிழகத்தின் ஆதரவுக்கரம் நீள வேண்டும்.
“அன்று எமது மக்களின் துயர்துடைக்கத் தமிழ்நாடு எவ்வாறெல்லாம் துணை நின்றதோ, அதேபோன்றதொரு உறுதியான ஆதரவை உங்களிடமிருந்தும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியப் பேரவை, புதிய முதலமைச்சரின் பணி சிறக்கத் தனது வாழ்த்துகளையும் ஆசிகளையும் தெரிவித்துள்ளது.
ஈழத் தமிழர்களின் அரசியல் தீர்வு விவகாரத்தில் தமிழகத்தின் புதிய தலைமை காத்திரமான பங்களிப்பை வழங்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பு தாயக மக்களிடையே எழுந்துள்ளதை இந்த வாழ்த்துச் செய்தி உறுதிப்படுத்துகிறது.













