வெளிநாடுகளில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவதைக் குறைக்கவும், நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மீதான அழுத்தத்தைக் குறைக்கவும் இந்திய அரசாங்கம் அவற்றுக்கான இறக்குமதி வரியை 6%-லிருந்து 15%-ஆக உயர்த்தியுள்ளது.
உயர்ந்த இந்த வரிகள், உலகின் இரண்டாவது பெரிய விலைமதிப்புள்ள உலோக நுகர்வோரான இந்தியாவில் தேவையைக் குறைக்கக்கூடும்.
அவை இந்தியாவின் வர்த்தப் பற்றாக்குறையைக் குறைக்கவும், ஆசியாவின் மிக மோசமாகச் செயல்படும் நாணயங்களில் ஒன்றான ரூபாய்க்கு ஆதரவளிக்கவும் உதவக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், 2024-ஆம் ஆண்டின் மத்தியில் இந்தியா சுங்க வரிகளைக் குறைத்த பிறகு தணிந்திருந்த கடத்தலை, இந்த அதிக இறக்குமதி வரிகள் மீண்டும் தூண்டிவிடக்கூடும் எனத் தொழில்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதிகள் மீது 10% அடிப்படை சுங்க வரியையும், 5% வேளாண் உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரியையும் (AIDC) இந்திய அரசாங்கம் விதித்துள்ளது.
இதன்மூலம், நடைமுறை இறக்குமதி வரி 6%-லிருந்து 15%-ஆக உயர்ந்துள்ளது.
அந்நியச் செலாவணிக் கையிருப்பைப் பாதுகாக்க உதவும் வகையில், ஓராண்டுக்குத் தங்கம் வாங்குவதைத் தவிர்க்குமாறு பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை மக்களை வலியுறுத்தினார்.
இந்தியா தனது தங்கத் தேவையின் பெரும்பகுதியை இறக்குமதி மூலமாகவே பூர்த்தி செய்கிறது.
அண்மைய விலை உயர்வு மற்றும் கடந்த ஆண்டில் பங்குகளில் இருந்து கிடைத்த எதிர்மறை வருமானம் ஆகியவற்றின் மத்தியில், இந்தியாவில் தங்கத்திற்கான தேவை, குறிப்பாக முதலீட்டு நோக்கங்களுக்காக, அதிகரித்துள்ளது.
இந்தியாவின் தங்கப் பரிவர்த்தனை வர்த்தக நிதிகளில் (ETFs) மார்ச் காலாண்டில் உள்வரவுகள் ஆண்டுக்கு ஆண்டு 186% அதிகரித்து, சாதனை அளவான 20 மெட்ரிக் தொன்களை எட்டியதாக உலக தங்க கவுன்சில் கடந்த மாதம் தெரிவித்தது.
இந்த நிலையில் இந்தியா அண்மைய வாரங்களாக தங்க இறக்குமதியைக் கட்டுப்படுத்த முயன்று வருகிறது. மேலும், தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி மீது 3% ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியை (IGST) விதிக்கத் தொடங்கியதால், வங்கிகள் ஒரு மாதத்திற்கும் மேலாக இறக்குமதியை நிறுத்தி வைத்துள்ளன.
இதன் விளைவாக, ஏப்ரல் மாத இறக்குமதி கிட்டத்தட்ட 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்தது.
வங்கிகள் 3% ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியைச் (IGST) செலுத்திய பிறகு இறக்குமதியை மீண்டும் தொடங்கியுள்ளன.
ஆனால் இறக்குமதி வரிகள் அதிகரித்ததைத் தொடர்ந்து இறக்குமதி மீண்டும் குறைய வாய்ப்புள்ளது என்று தங்கம் மற்றும் வெள்ளி வியாபாரிகள் தெரிவித்தனர்.

















