சவுத்போர்ட் கத்திக்குத்துத் தாக்குதலில் காயமடைந்தவர்களின் ரகசிய மருத்துவ ஆவணங்களை, சிகிச்சையுடன் எவ்வித தொடர்பும் இல்லாத சுமார் 50 மருத்துவமனை ஊழியர்கள் முறையற்ற வகையில் பார்வையிட்டுள்ளதை லிவர்பூல் மருத்துவமனை நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சவுத்போர்ட் பகுதியில் இசை நடன வகுப்பில் நடத்தப்பட்ட கொடூர கத்திக்குத்துத் தாக்குதலில் மூன்று சிறுமிகள் கொல்லப்பட்டதுடன், எட்டு குழந்தைகள் மற்றும் இரண்டு பெரியவர்கள் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்களில் சிலர் லிவர்பூலில் உள்ள ‘எய்ன்ட்ரி’ (Aintree) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அவர்கள் அனுமதிக்கப்பட்ட சில நாட்களிலேயே இந்தத் தகவல் விதிமீறல் (Data breach) நடந்துள்ள போதிலும், இந்த வாரமே இத்தகவல் உத்தியோகபூர்வமாக வௌியாகியுள்ளது.
இதேவேளை, எய்ன்ட்ரி மருத்துவமனையை நிர்வகிக்கும் லிவர்பூல் பல்கலைக்கழக மருத்துவமனைகள் குழுமம் (UHLG) இந்தச் சம்பவத்திற்கு மன்னிப்புக் கேட்டுள்ளதுடன், ஊழியர்களின் இந்தச் செயல் “மன்னிக்க முடியாதது” என்று தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட தகவல்களுக்குப் பாதுகாப்பு வழங்கத் தவறிய இந்தச் சம்பவம், பிரித்தானிய சுகாதாரத் துறையில் (NHS) பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.















