கந்தளாய், அக்போபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கித்துளுத்து பகுதியில் இன்று (16) அதிகாலை மினரல் வாட்டர் போத்தல்களை ஏற்றிச்சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளானது.
இன்று அதிகாலை சுமார் 5.00 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில், லொறியின் பின்பக்க தட்டு (Loading Bed) கழன்று வீதியில் தலைகீழாக விழுந்து நொறுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கண்டி கம்பளை வழியாக திருகோணமலை நோக்கி மினரல் வாட்டர் போத்தல்களை ஏற்றிச்சென்ற லொறி, அக்போபுர கித்துளுத்து பகுதியை அண்மித்தபோது சாரதிக்கு ஏற்பட்ட திடீர் தூக்கக் கலக்கம் காரணமாக வீதியை விட்டு விலகிச் சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, லொறியை மீண்டும் வீதிக்கு திருப்ப முயன்ற வேளையில் சாரதி கட்டுப்பாட்டை இழந்ததால், லொறியின் பின்பக்க தட்டு திடீரென கழன்று விழுந்துள்ளது.
இந்த விபத்தில், லொறியில் ஏற்றிச் செல்லப்பட்ட பெருமளவிலான மினரல் வாட்டர் போத்தல்கள் வீதியில் சிதறி உடைந்து சேதமடைந்துள்ளன.
சாரதியும் உதவியாளரும் உயிர் தப்பியுள்ளதுடன், எவருக்கும் பாரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.













