மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோவில் எபோலா வைரஸ் நோய் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளதைத் தொடர்ந்து, சர்வதேச அளவில் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மத்திய ஆபிரிக்காவில் அமைந்துள்ள கொங்கோ குடியரசில் எபோலா (Ebola) வைரஸ் நோய் மிகத் தீவிரமாகப் பரவி வருவதை அடுத்து, உலகளாவிய சுகாதார அவசர நிலை (Global Health Emergency) பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு ஏற்பட்ட எபோலா தொற்று பரவலின் போது கொங்கோவில் சுமார் 1,000 பேர் உயிரிழந்திருந்தனர். அந்த வடு மாறுவதற்குள், தற்போது மீண்டும் எபோலா வைரஸ் அங்கு அதிவேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது. தற்போதைய புதிய அலை பாதிப்பினால் அங்கு இதுவரை 88 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், மேலும் 300க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் பாதிப்புக்குள்ளாகி தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொங்கோவின் எல்லைப் பகுதிகளில் இந்த வைரஸ் வேகம் எடுத்துள்ளதால், அதன் அண்டை நாடுகளான உகண்டா, தென் சூடான் போன்ற நாடுகளுக்கும் எபோலா வைரஸ் மிக எளிதாகப் பரவக்கூடும் என சர்வதேச சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
நிலைமையின் தீவிரத்தைக் கருத்திற்கொண்டு, உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) இந்தத் தொற்றை சர்வதேச கவலைக்குரிய பொதுச் சுகாதார அவசர நிலையாகப் பிரகடனம் செய்துள்ளது.
இது குறித்து உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ் (Tedros Adhanom Ghebreyesus) தனது உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ (X) வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்:
“கொங்கோவில் கட்டுப்பாடின்றி பரவி வரும் எபோலா வைரஸ் தாக்கம் காரணமாக உலக சுகாதார அவசரநிலை பிரகடனம் செய்யப்படுகிறது. இந்தத் தொற்று ஏனைய நாடுகளுக்குப் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு, நாடுகள் தங்களது சர்வதேச எல்லைகளை (International borders) உடனடியாக மூடுமாறு அறிவுறுத்தப்படுகிறது.”
எபோலா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்ட நாடுகளுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்கவும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் விசேட மருத்துவக் குழுக்கள் அவசரமாகக் களமிறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.















