வனவாஸல ரயில் விபத்து தற்செயலாக நடக்கவில்லை என்பதும், போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையான ஒருவரால் தண்டவாள பாகங்கள் திருடப்பட்டதே விபத்துக்குக் காரணம் என்பதும் பொலிஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
வனவாஸல பகுதியில் பயணிகள் ரயில் தடம் புரண்டு ஏற்பட்ட பயங்கர விபத்திற்கு, தண்டவாளத்தின் பாகங்கள் திருடப்பட்டதே காரணம் என மேல் மாகாண வட பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் காலிங்க ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
கழற்றப்பட்ட தண்டவாளப் பாகங்கள் வெறும் 3,000 ரூபாய் பணத்திற்காகவே இரும்புக்கடையில் விற்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வனவாஸல ரயில் விபத்து குறித்துத் தெளிவுபடுத்துவதற்காக இன்று (17) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த திடுக்கிடும் விபரங்களை வௌியிட்டார்.
ரயில் தண்டவாளத்தின் ஆணைகள் (Fittings and Bolts) மற்றும் பாகங்களைக் கழற்றிய குற்றச்சாட்டின் பேரில் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கடுமையான போதைப்பொருள் பாவனைக்கு (Drug Addict) அடிமையானவர் என்றும், போதைப்பொருள் வாங்குவதற்காகவே இந்தத் திருட்டில் ஈடுபட்டார் என்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்ட போதைப்பொருள் இளைஞரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணைகளின் மூலம், திருடப்பட்ட தண்டவாளப் பாகங்கள் எங்கு விற்கப்பட்டன என்ற விபரம் வௌியானது.
அதன் அடிப்படையில், அந்தப் பொருட்களைக் கொள்வனவு செய்த பழைய இரும்புக்கடை அடையாளம் காணப்பட்டு, அதன் உரிமையாளரும் பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் காலிங்க ஜயசிங்க:
“தண்டவாளப் பாகங்களைக் கழற்றி விற்பனை செய்த நபருக்கு வெறும் 3,000 ரூபாய் என்ற மிகக் குறைந்த பணமே கிடைத்துள்ளது. ஆனால், அவரது இந்தச் செயலால் ரயில்வே திணைக்களத்திற்கும் நாட்டிற்கும் மில்லியன் கணக்கிலான ரூபாய் நட்டமும், பொதுமக்களின் உயிருக்கு மிகப்பெரிய ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.
எனவே, திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவருக்குப் பாரிய தண்டனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேவேளை, திருடப்பட்ட பொதுச் சொத்துக்களைத் தெரிந்தே கொள்வனவு செய்தமைக்காக, அந்தப் பொருட்களை வாங்கிய கடை உரிமையாளருக்கு எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கை தொடரப்படும்.”
பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தமை மற்றும் திருட்டு ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு மேலதிகமாக, இந்த விபத்தினால் ரயில்வே திணைக்களத்திற்கு ஏற்பட்ட பாரிய சேதங்கள் மற்றும் நட்டங்களைச் சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்தே ஈடு செய்வதற்கான சிவில் வழக்குகளும் தொடரப்படவுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதோடு, மேல் மாகாண வட பிராந்திய பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, வனவாசல மற்றும் களனி ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடையிலான ரயில் பாதையின் பாகங்களைக் கழற்றிய சந்தேக நபரும், அந்தப் பாகங்களை கொள்வனவு செய்த நபரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர்கள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அவர்களை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.














