2026.06.01 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முக்கிய தீர்மானங்கள் மற்றும் அங்கீகாரங்கள் குறித்த விபரங்கள் இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.
1. கிராமிய வீதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய திட்டம்
தேசிய வீதிக் கட்டமைப்புக்குச் சொந்தமில்லாத கிராமிய மற்றும் பிரதேச வீதிகளில் விபத்துக்களும் உயிர்ச்சேதங்களும் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, நிதிப் பற்றாக்குறையால் முடங்கிக்கிடக்கும் இவ்வீதிகளைப் புனரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட மட்டத்தில் ஆபத்தான இடங்களை இனங்கண்டு, வீதிச் சமிக்ஞைகள், பாதுகாப்பு வேலிகள், வேகக் கட்டுப்பாட்டுத் தடைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
2026 ஆம் ஆண்டின் தேசிய வரவு செலவுத் திட்டத்தின் கீழ், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு ஒதுக்கப்படும் நிதியிலிருந்து மாகாண சபைகளின் ஆலோசனையுடன் இத்திட்டம் அமுல்படுத்தப்படும்.
2. நாடு முழுவதும் 1,000 புதிய சுகவாழ்வு நிலையங்கள் (2026–2028)
தொற்றா நோய்கள், தொற்று நோய்கள் மற்றும் விபத்துக்கள் மூலம் ஏற்படும் சுகாதார சவால்களை எதிர்கொள்ளும் வகையில் ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ எனும் தொலைநோக்குக்கு அமைய ஆரம்ப சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தற்போதுள்ள ஆரம்ப சுகாதார நிறுவனங்களின் எண்ணிக்கையை 2,000 ஆக அதிகரிக்கும் நோக்கில், 2026 – 2028 காலப்பகுதிக்குள் 1,000 புதிய சுகவாழ்வு மற்றும் சுகாதாரநல நிலையங்கள் கட்டம் கட்டமாக நிறுவப்படும்.
3. இரத்தினபுரி போதனா மருத்துவமனையில் புதிய சிறுவர் தீவிர சிகிச்சைப் பிரிவு
சப்ரகமுவ மாகாணத்தின் பிரதான மருத்துவமனையான இரத்தினபுரி போதனா மருத்துவமனையின் சிறுவர் நோயாளர் விடுதிக் கட்டிடத்தொகுதியின் 4-வது மாடியில் ‘சிறுவர் தீவிர சிகிச்சைப் பிரிவு’ (NICU/PICU) நிர்மாணிக்கப்படவுள்ளது.
இதற்கான 64.15 மில்லியன் ரூபாய் முழுமையான நிதியுதவியையும் உள்நாட்டு நன்கொடையாளர்கள் வழங்க முன்வந்துள்ளனர்.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ள சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
4. கடலோர மற்றும் மீன்பிடித் துறைமுகங்களில் திண்மக்கழிவு முகாமைத்துவம்
கடல் சூழலை அச்சுறுத்தும் பிளாஸ்டிக் மற்றும் ஃபைபர் கிளாஸ் (Fiberglass) கழிவுகளைக் கட்டுப்படுத்த, கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் கீழ் 84 பிரதேசக் குழுக்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
இதற்கென பிரத்தியேக தொலைபேசி செயலி (Mobile App) அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
ஃபைபர் கிளாஸ் கழிவுகளுக்குப் பொறுப்பேற்கும் ‘உற்பத்தியாளரின் விரிவான பொறுப்பு’ (EPR) கோட்பாட்டை அறிமுகம் செய்ய, 1996 ஆம் ஆண்டின் கடற்றொழில் சட்டமும், 2008 ஆம் ஆண்டின் கடல்சார் தீழ்ப்புத் தடைச் சட்டமும் திருத்தப்படும்.
5. கடல்சார் எண்ணெய் கசிவுகளைத் தடுக்க டிஜிட்டல் தளம் (Digital Platform)
இலங்கையைச் சுற்றியுள்ள கடல் வலயங்களில் கப்பல் போக்குவரத்து அதிகரிப்பால் ஏற்படும் எண்ணெய் மற்றும் அபாயகர இரசாயனக் கசிவுகளைத் தடுக்கவும், துரிதமாகச் செயலாற்றவும் புதிய ‘தேசிய திட்டம்’ மற்றும் அதன் டிஜிட்டல் தளத்தின் முதலாம் கட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
6. இலங்கை தேசிய பசுமை செய்தியாக்க முறைமை இற்றைப்படுத்தல்
சமகால உலகளாவிய காலநிலை மாற்றம் மற்றும் பரிஸ் உடன்படிக்கையின் இலக்குகளுக்கு அமைய, 2012 இல் உருவாக்கப்பட்ட ‘தேசிய பசுமை செய்தியாக்க முறைமை’ இற்றைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்கீழ் சுற்றாடல், சமூகம் மற்றும் கட்டுப்பாடு சார்ந்த 76 குறிகாட்டிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், 24 அங்கத்தவர்களுடன் கூடிய ‘தேசிய நிலைபெறுதகு செய்தியாக்கக் குழு’ மீண்டும் நிறுவப்படவுள்ளது.
7. 3.5 மில்லியன் காணி வரைபடங்கள் எண்ணிமமயமாக்கல் (Digitization)
இலங்கையிலுள்ள மொத்தக் காணித் துண்டுகளில் இதுவரை நில அளவை செய்யப்பட்டுள்ள வன்பிரதி (Hard copy) வரைபடங்களை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 1800 ஆம் ஆண்டிலிருந்து நில அளவை செய்யப்பட்டுள்ள 3.5 மில்லியன் காணித்துண்டுகளின் வரைபடங்கள் எண்ணிமமயமாக்கப்பட்டு காணித் தகவல் முறைமையில் (LIS) உட்சேர்க்கப்படும்.
8. ‘நகரங்கள் 10’ மற்றும் ‘நகர நாமமிடல்’ (City Branding) அபிவிருத்தித் திட்டம்
மரபுரிமைகளைப் பாதுகாத்து மாதிரி நகரங்களை உருவாக்கும் நோக்கில், 2026 வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி முக்கிய நகரங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
அநுராதாபுரம், கதிர்காமம், கொழும்பு மற்றும் கண்டி ஆகிய நகரங்களின் தனித்துவ மேம்பாட்டிற்கு 2026 இல் 325 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
யாழ்ப்பாணம், மாத்தளை, ஹட்டன், மட்டக்களப்பு, சிலாபம், தம்புத்தேகம, வவுனியா, எஹலியகொட, பதுளை மற்றும் மாத்தறை ஆகிய நகரங்களில் 217 முன்னுரிமைத் திட்டங்களை அமுல்படுத்த 1,475 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
9. ‘நட்பு நகரம்’ வேலைத்திட்டத்தின் கீழ் 25 நகரங்கள் மேம்பாடு
பொதுமக்களின் நல்வாழ்வு மற்றும் வசதிக்காக நாடளாவிய ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிறிய நகரங்களை மேம்படுத்தும் ‘நட்பு நகரம்’ திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 23 நகரங்களின் அபிவிருத்திக்காக 581 மில்லியன் ரூபாய் நிதியை ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
10. கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மின்விளக்குகள் சீரமைப்பு
போதைப்பொருள் பாவனையாளர்கள் மற்றும் திருடர்களால் 85% சேதமாக்கப்பட்டுள்ள கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் மின்விளக்குத் தொகுதிகள் முதற்கட்டமாகப் புதுப்பிக்கப்படவுள்ளன.
பேலியகொட, கெரவலபிட்டி, சீதுவ, ஜாஎல இடைமாறல்கள் மற்றும் விமான நிலைய விஸ்தீரணப் பகுதிகளில் மின்விளக்குகளைப் பொருத்த 1,098.50 மில்லியன் ரூபாய் மதிப்பீட்டில் தேசிய போட்டி விலைமனுக்கோரல் ஊடாக ஒப்பந்தக்காரர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
11. அமரதேவ அழகியல் கலைகள் மற்றும் ஆய்வு மையப் பணிகள் நிறைவு
மறைந்த பண்டித் அமரதேவ அவர்களின் நினைவாக ஆரம்பிக்கப்பட்டு 9 ஆண்டுகளாக முடங்கியுள்ள ‘அமரதேச ஆச்சிரமம்’ கட்டுமானப் பணிகளை இவ்வாண்டில் முழுமையாக நிறைவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக எஞ்சிய 113.17 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்ய உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
12. முள்ளிக்குளம் காற்றாலை மின் திட்ட ஒப்பந்தம் (பகுதி A)
முள்ளிக்குளம் காற்றாலை மின் விநியோகக் கருத்திட்டத்தின் பகுதி A ஒப்பந்தம் சர்வதேச போட்டி பெறுகை முறையின் கீழ், குறைந்த விலைமனுதாரரான M/S Isgec Heavy Engineering (Pvt) Ltd நிறுவனத்திற்கு 6.04 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் 499.66 மில்லியன் இலங்கை ரூபாய் தொகைக்கு வழங்க அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
13. 6 இலட்சம் குடும்பங்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்கும் திட்டம்
பாதுகாப்பான குடிநீர் வசதியற்ற கிராமப்புறங்களை இலக்காகக் கொண்டு, 50 சிறிய நகரங்கள் உள்ளடங்களாக 300 திட்டங்கள் ஊடாக 600,000 குடும்பங்களுக்கு நவீன சுத்திகரிப்பு தொழில்நுட்பத்துடன் கூடிய குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சாத்தியவள ஆய்வின் அடிப்படையில் 2027-2029 காலப்பகுதியில் இத்திட்டம் அமுலாகும்.
14. ஓசோன் படலப் பாதுகாப்பிற்காக இரசாயன இறக்குமதி தடை
மொன்றியல் கூட்டமைப்பின் கடப்பாடுகளுக்கு அமைய புவி வெப்பமடைதலைக் கட்டுப்படுத்த, ஓசோன் படலத்தைப் பாதிக்கும் ஹைட்ரோகுளோரோபுளோரோகார்பன் (HCFC) பாவனை உபகரணங்களின் இறக்குமதி தடை செய்யப்படவுள்ளது.
2026 ஜூன் 06 முதல் HCFC மூலம் மட்டும் இயங்கும் உபகரணங்கள்/உதிரிப்பாகங்கள் இறக்குமதி தடை செய்யப்படுவதற்கான அதிவிசேட வர்த்தமானி ஒழுங்குவிதிகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
15. மொனராகல மற்றும் ஹம்பாந்தோட்டையில் புதிய ‘யானை வழித்தடங்கள்’ பிரகடனம்
யானை – மனித மோதல்களைக் குறைக்கும் நோக்கில் துரித பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன:
அதன்படி, மொனராகலை மாவட்டத்தின் ஹந்தபானகல – யால தேசிய சரணாலயம் வரையான யானை புலம்பெயர்வு பாதை புதிய சரணாலயமாகப் பிரகடனம் செய்யப்படும்.
வெட்டஹிர கந்த இயற்கை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள 5 அனுமதிப்பத்திர காணிகளுக்குப் பதிலாக மாற்று காணிகள் வழங்கப்படும்.
ஹம்பாந்தோட்டை கொஹொலன்கல யானை வழித்தடத்திலுள்ள கட்டிடங்கள் இழப்பீடு வழங்கி கையகப்படுத்தப்படும்.
16. ‘தித்வா’ சூறாவளி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண நீடிப்பு
‘தித்வா’ சூறாவளி காரணமாக வீடுகளை இழந்த மக்களுக்கான மாதாந்த வீட்டு வாடகை கொடுப்பனவு 6 மாதங்களில் இருந்து 9 மாதங்கள் வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கற்கள், மண் சரிவினால் பாதிக்கப்பட்ட வயல் நிலங்களை மீண்டும் விவசாயத்திற்கு உகந்ததாக மாற்றியமைக்க நிதி மற்றும் சுற்றறிக்கைகள் வழங்கப்படும்.
17. சீனா – இலங்கை இடையே சுற்றுலாத் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம்
தொழில் பயிற்சி, கல்விப் பரிமாற்றம் மற்றும் ஒருங்கிணைந்த ஆராய்ச்சிகளை மேம்படுத்தும் நோக்கில், இலங்கை சுற்றுலா ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்திற்கும், சீனாவின் மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலா நிர்வாக கலாசாலைக்கும் இடையே உத்தியோகபூர்வ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.













