கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் எஞ்சியிருந்த இறுதி இரண்டு மருத்துவக் கண்காணிப்புடனான போதைப்பொருள் நுகர்வு மையங்களும் இந்த வாரத்துடன் நிரந்தரமாக மூடப்படவுள்ளதால், அங்குள்ள சமூக நல அமைப்புகள் மற்றும் போதைப்பொருள் நுகர்வோர் மத்தியில் பெரும் அச்சமும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது.
மாகாண அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடு ஜூன் 13ஆம் திகதியுடன் முடிவுக்கு வருவதை அடுத்து, ஒட்டாவாவில் இயங்கி வந்த ‘சான்டி ஹில் சமூக சுகாதார மையம்’ மற்றும் ‘ஒட்டாவா இன்னர் சிட்டி ஹெல்த்’ ஆகிய இரு இறுதி மையங்களும் தங்களது சேவைகளை முழுமையாக நிறுத்தக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த மையங்களின் சேவைகளைத் தினமும் நம்பியிருக்கும் நூற்றுக்கணக்கானவர்களில் ஒருவரான பெர்ரி ஃபைஃப் (Barry Fyfe) என்பவர், இந்த மூடல் முடிவு குறித்துக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
மையங்கள் மூடப்படுவதால் போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் தங்களது பழக்கத்தை நிறுத்தப் போவதில்லை என்றும், அது பொதுமக்களுக்குப் பெரிய அச்சுறுத்தலாக மாறப்போகிறது என்றும் பயனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மையங்கள் இல்லாத பட்சத்தில், போதைப்பொருள் நுகர்வோர் அனைவரும் பூங்காக்கள், வீதிகள் எனப் பொதுமக்களின் நடமாட்டம் உள்ள திறந்தவெளிகளிலேயே போதைப்பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்குவர்.
போதைப்பொருட்களுக்குப் பயன்படுத்தப்படும் ஊசிகள் மற்றும் உபகரணங்கள் (Used gear) பொதுவெளியில் ஆங்காங்கே வீசப்பட்டுக் கிடக்கும் அபாயம் உள்ளதால், அது ஒட்டுமொத்த நகரத்தின் சுகாதாரத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த மையங்களின் மூடல் காரணமாக, நகரில் போதைப்பொருள் அதிகரிப்பால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என அங்குள்ள சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.














