ஈரான் மீது கடுமையாக தாக்குதல் நடத்துவேன் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதைத் தொடர்ந்து நடந்த அண்மைய அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, வளைகுடாப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான “ஒப்பந்தம் செய்துகொள்ள தெஹ்ரான் அதிக காலம் எடுத்துக்கொண்டது” என்று ட்ரம்ப் கூறியதைத் தொடர்ந்து, இரவோடு இரவாகத் தொடங்கப்பட்ட தனது தற்காப்புத் தாக்குதல்களை தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் நிறைவு செய்ததாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (சென்ட்காம்) தெரிவித்துள்ளது.
இதற்குப் பதிலடியாக, முந்தைய நாள் ஈரான் நடத்திய பதிலடித் தாக்குதல்களின் இலக்குகளாக இருந்த பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தெஹ்ரான் கூறியது.
அண்மைய நாட்களில் பதிலடித் தாக்குதல்கள் அதிகரித்திருப்பது, ஏப்ரல் மாதம் இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு பலவீனமான போர் நிறுத்த ஒப்பந்தத்தைச் சோதித்துள்ளது.
அண்மைய அமெரிக்கத் தாக்குதலுக்குப் பின்னர், ஈரானின் தெற்கில் உள்ள ஹார்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள நகரங்களில் வெடிச்சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முந்தைய சுற்றுத் தாக்குதல்களில் அமெரிக்கப் படைகள் இப்பகுதியிலுள்ள வான் பாதுகாப்பு, ரேடார் மற்றும் பிற தளங்களையும் தாக்கியிருந்தன.
அண்மைய மோதலில், ஹாமுஸ் ஜலசந்தி வழியாகச் சென்ற இரண்டு எண்ணெய் கப்பல்களைத் தாக்கியதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) கூறியதாக தெஹ்ரானின் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இருப்பினும் இதற்கு உடனடி உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.
ஹார்முஸ் நீரிணை அனைத்து வகையான கப்பல்களுக்கும் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது என்று ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து இது நிகழ்ந்தது.
எனினும், வணிகக் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணைக்குள் தொடர்ந்து சென்று வருகின்றன என்று சென்ட்காம் கூறியது.
கப்பல் போக்குவரத்து வழித்தடம் மூடப்பட்டதைத் தொடர்ந்தும், கப்பல்கள் மீதான வெளிப்படையான தாக்குதல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்தும் எண்ணெய் விலைகள் உயர்ந்தன.
உலகளாவிய அளவுகோலாகக் கருதப்படும் பிரென்ட் மசகு எண்ணெய், ஆசியாவில் காலை நேர வர்த்தகத்தின் போது சுமார் 2% உயர்ந்ததைத் தொடர்ந்து, ஒரு பீப்பாய் 95 டொலருக்கும் மேலாக அதிகரித்தது.
ஏப்ரல் மாதம், அமெரிக்காவும் ஈரானும் ஆரம்பத்தில் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் நோக்கில் ஒரு போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன.
அதன் பின்னர், இரு தரப்பினரும் முழு அளவிலான மோதல்களுக்குத் திரும்பாமல், அவ்வப்போது துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும், வொஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையே பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கான அண்மைய முயற்சிகள் முடங்கிவிட்டதோடு, தாக்குதல்களும் அதிகரித்துள்ளன.














